தேர்தலுக்குப் பின்னரும் ‘நமக்கு நாமே’ தொடரும்... ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகும் நமக்கு நாமே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடரும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஆயத்த வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக பொருளாளர் ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ‘நமக்கு நாமே' என்ற பெயரில் பொதுமக்களை சந்தித்து குறைகேட்டு வருகிறார்.
அந்த வகையில், நான்காவது கட்டமாக சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஸ்டாலின் நேற்று மாதவரம் தொகுதியில் மகளிர் சுயஉதவி குழு பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நமக்கு நாமே...
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், இதுவரை 230 தொகுதிகளில் ‘நமக்கு நாமே' பயணத்தை நிறைவு செய்துள்ளேன்.
சாதனை...
வரும் 12-ந் தேதியுடன் 234 தொகுதிகளிலும் எனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன். இதை நான் சாதனையாக கருதுகிறேன்.
மகளிர் சுய உதவிக் குழு...
மகளிர் சுயஉதவி குழுவானது 1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஏன் தொடங்கப்பட்டது? என்றால், பெண்கள் தங்களது சொந்தக்காலில் தன்னம்பிக்கையோடு வாழ சுயஉதவி குழுவை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்தார்.
அதிமுக ஆட்சியில்...
இந்த குழுக்களுக்கு சிறுதொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் சுயஉதவி குழுக்கள் இல்லாமல் போனது.
வங்கிக்கடன்...
2006-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்தபோது, உள்ளாட்சித்துறை அமைச்சராக நான் இருந்தேன். அப்போது சமூக நலத்துறையிடம் இருந்த மகளிர் சுயஉதவி குழுவை, தலைவர் கருணாநிதி எனது துறைக்கு மாற்றி என்னிடம் ஒப்படைத்தார்.
நிதி வழங்கினேன்..
தொடர்ந்து தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடனும், சுழல் நிதியையும் வழங்கினேன்.
செய்தார்களா..?
தற்போது நடைபெறும் ஆட்சியில் பெண் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார். ஆனால், இந்த 5 ஆண்டுகளில் சுயஉதவி குழுக்களுக்கு ஏதாவது கடன் வழங்கப்பட்டதா?. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வங்கி கடன் 25 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது செயல்பாட்டுக்கு வந்ததா?.
நடமாடும் அங்காடிகள்...
முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றில், சுயஉதவி குழு உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய 100 நடமாடும் அங்காடிகள் தொடங்கப்படும் என்றார். அது நடந்ததா?.
செல்போன்...
தற்போது மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பு வெளியிட்டு 3 மாத காலமாகியும் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
டாஸ்மாக் கடை...
டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று தொடர்ந்து குரல் வலுத்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை அடைப்போம் என்று தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
முதல் கையெழுத்து...
அவர், செய்வதை சொல்வார், சொல்வதை செய்வார். எனவே, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்து மது விலக்குக்காகத்தான் இருக்கும்.
நீதி விசாரணை
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் அதுகுறித்த நீதி விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் அமைச்சராக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நமக்கு நாமே...
தற்போது நடத்தப்படும் ‘நமக்கு நாமே' சுற்றுப்பயணத்தைப்போல, தேர்தலுக்கு பிறகும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடரும். உங்களைத்தேடி அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் வரவேண்டும் என்ற நிலை உருவாகவேண்டும்.
மக்களைத் தேடி பிரதிநிதிகள் வர வேண்டும்..
இல்லையென்றால், அவர்கள் அந்த பதவியில் இருக்கக்கூடாது. அதற்காக புதிய சட்டமே கொண்டுவரலாம். அல்லது கட்சியில் அப்படியொரு முடிவை எடுக்கலாம். தி.மு.க. அதற்கான நடவடிக்கையை எடுக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.