பெங்களூரிலும் வெடித்த இந்தி திணிப்பு எதிர்ப்பு புரட்சி.. மெட்ரோ ஸ்டேஷன்களில் ஹிந்தி சொற்கள் அகற்றம்
சென்னை: பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தி திணிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஹிந்தியை தேசிய மொழி என தவறாக நினைக்கும்போக்கு கர்நாடகாவில் இதுவரை இருந்து வந்தது. எனவே அங்கு சகஜமாக எல்லா இடங்களிலும் இந்தி புழங்கியது.
ஆனால், தமிழகத்தில் நடைபெற்ற மைல் கல், மெட்ரோ ரயில் நிலைய இந்தி திணிப்புக்கு எதிராக சமீபத்தில் தமிழ் நெட்டிசன்கள் தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர். இதன்பிறகு கர்நாடகாவிலும் நிலைமை மாறியுள்ளது.
தெளிவான கன்னடர்கள்
தங்கள் தாய்மொழிக்கும், ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் தந்தால் போதும், இந்தி என்பது வட இந்திய மொழி என்ற தெளிவு கன்னடர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்தி திணிப்பு நடைபெற்றால் தங்கள் தாய்மொழி அழியும் என்ற பயமும் அவர்களுக்கு வந்துள்ளது.
எதிர்ப்பு
இதையடுத்து, பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருந்த, ஹிந்தியிலான ஸ்டேஷன் பெயர்களை அழிக்க கன்னட அமைப்பினர் திரண்டனர். சோஷியல் மீடியாக்களிலும் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டினர். கருப்பு மை பூசி ஹிந்தி சொற்களை அழிக்க கர்நாடக ரக்ஷனா வேதிகே அமைப்பினர் திட்டமிட்டனர்.
பிளாஸ்டரால் மறைப்பு
இது பெரும் பிரச்சினையாக உருவாவதை உணர்ந்த மெட்ரோ அதிகாரிகள் மெஜஸ்டிக்கிலுள்ள மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சிக்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர்களை ஹிந்தியில் எழுதியிருந்ததை பிளாஸ்டரை வைத்து ஒட்டி மறைத்துள்ளனர்.
பெயிண்ட் அடிக்க திட்டம்
இதுகுறித்து கர்நாடக ரக்ஷன வேதிகே, தலைவர் பிரவீன் ஷெட்டி கூறுகையில், "மெட்ரோ ரயில் நிலையங்களிலுள்ள ஹிந்தி சொற்களை கருப்பு பெயிண்ட் அடிக்க திட்டமிட்டிருந்தோம். இந்த நிலையில் மெட்ரோ அதிகாரிகள் இவ்வாறு ஸ்டேஷன் பெயரை மறைத்துள்ளனர். இது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. ஹிந்தி சொற்களை நிரந்தரமாக அகற்றாவிட்டால், நாங்களே அதை அகற்ற தயங்க மாட்டோம்" என்றார்.
அறிவிக்கவில்லை
ஆனால், ஹிந்தி சொற்களை தாங்கள் மறைத்ததாக இதுவரை மெட்ரோ சார்பில் அறிவிப்பு வெளியாகவில்லை. யார் அதை செய்தார்கள் என்பது குறித்தும் மெட்ரோ அதிகாரிகள் கேள்வி எழுப்பவில்லை.