அதிமுக ஆட்சியை நிச்சயம் கவிழ்ப்போம் என பந்தயம் கட்டினார் தமிழிசை… நாஞ்சில் சம்பத் 'பகீர்'!
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை நிச்சயமாக கலைத்துவிடுவோம் என்று பாஜக தலைவர் தமிழிசை பந்தயம் கட்டியதாக அதிமுக அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட்டுள்ளார்.
சென்னை: அதிமுகவை உடைக்கும் வேலையில் பாஜகதான் தீவிரமாக இருக்கிறது; அதிமுக ஆட்சியை கலைப்போம் என பந்தயமே கட்டியிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன் என்று நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா அணி என்றும் ஓபிஎஸ் அணி என்றும் பிரிந்து செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அம்மா கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
பாஜக அடாவடி
இந்த உடைப்பிற்கு காரணம் முழுக்க முழுக்க பாஜகதான் என்று அதிமுக அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: அமைச்சர்கள் பிரிந்து செல்லும் முடிவை எடுக்கத் தூண்டப்பட்டார்கள். இந்த அழுத்தத்தை கொடுத்தது பாஜகதான்.
இரட்டை இலை முடக்கம்
இரட்டை இலை சின்னம் முடக்குவதற்கு முன்பே சின்னம் இவர்களுக்கு கிடைக்காது என்று பாஜகவினர் சொன்னார்கள். அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று பாஜகவினர் சொன்னார்கள். அதிமுக அழிந்துவிட்டது என்று பாஜக அறிவித்தார்கள். இந்தக் கோணத்தில் பார்க்கும் போது அதிமுக அழிக்க பாஜக முழு வேலையை செய்து வருகிறது.
ஆட்சி கலைக்க பந்தயம்
பாஜக தலைவர் தமிழிசை, என் நண்பர் ஒருவரிடம் , அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று பந்தயம் கட்டி இருக்கிறார். அந்த நண்பர் அவரிடம் அதற்கான சாத்தியம் இல்லை என்று விவாதித்திருக்கிறார். பெரும்பான்மை உள்ள ஆட்சியை எப்படி கலைக்க முடியும் என்று நண்பர் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு உறுதியாக நாங்கள் ஆட்சி கலைப்போம் என்று தமிழிசை கூறியிருக்கிறார்.
பவர் சென்டர்
அதிமுகவை அழிக்க பாஜகவினர் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார்கள். வருமானவரித்துறையை பயன்படுத்துகிறார்கள். பவர் செக்டர், சென்டர் என அனைத்தையும் பயன்படுத்தும் மோசமான காரியத்தை பாஜக செய்து வருகிறது. இது நாகரிகமான நடவடிக்கை அல்ல என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.