தினகரன் தலைமையில் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும் .. நாஞ்சில் சம்பத் அதிரடி!
இன்னும் இரண்டு நாட்களில் தினகரன் தலைமையில் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும் எனவும் நாஞ்சில் சம்பத் கூறினார்.
சென்னை: கட்சியை வலிமையுடன் தினகரன் வழி நடத்துவார் என்றும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் தலைமையில் அதிமுக விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும் எனவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து இரண்டு அணிகளாக பிளவுபட்ட அதிமுக தற்போது மூன்றாக உடைந்துள்ளது. சசிகலா தரப்பு ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் உள்ளது.
இதனிடையே தற்போது முதல்வர் எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால் மூன்றாவது அணியும் உருவாகியுள்ளது. இதனை அடுத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அவசரம் அவசரமாக அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் ஆலோசனை நடத்தினர். எம்எல்ஏக்கள் ஜக்கையன், தங்கத்தமிழ் செல்வன், கதிர்காமு, வெற்றிவேல், செல்வ மோகன்தாஸ், சாத்தூர் சுப்ரமணியன், ஏழுமலை, சின்னத்தம்பி மற்றும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்தும் கலந்துகொண்டார். 3 மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின்னர் டிடிவி தினகரன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், ஓ.பி.எஸ். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. டெல்லியில் இருக்கும் பா.ஜ.க.வின் அற்பத்தனமான மிரட்டுலுக்கு பயந்து ஆதாயச் சூதாடிகள் எடுக்கிற முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது. தினகரன் தலைமையில் தான் அதிமுக செயல்படும்.
அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டிடிவி தினகரன். ஜெயக்குமாரை நிதி அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்ததே தினகரன் தான்.இன்னும் 2 நாட்களில் தினகரன் தலைமையில் அதிமுக விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும் என்றார்.