மூக்குத்தி பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுவது போல பேசும் டி.டி.வி.தினகரன்-'ஜால்ரா' நாஞ்சில் சம்பத்
அதிமுகவுக்கு தலைமை ஏற்க தகுதியானவர் டிடிவி தினகரன்தான்; அமைச்சர்கள் அச்சத்தில் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவை காப்பாற்றுவதற்காக பொறுப்பேற்ற நாளில் இருந்து கண்துஞ்சாமல் உழைத்தவர் டிடிவி தினகரன்; அவர் மூக்குத்தி பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுவது போல பேசுகிறவர் என வருணித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
அதிமுகவில் இருந்து தினகரன் சார்ந்த குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இதையேற்று தினகரனும் தாம் கட்சியில் ஒதுங்கிவிடுவதாக கூறியுள்ளார்.
ஆனால் தினகரனால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்; தாம் அவரது தலைமையை மட்டுமே ஏற்பேன் என அடம்பிடித்து வருகிறார் நாஞ்சில் சம்பத். இது தொடர்பாக சன் டிவி நியூஸ் சேனலுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி:
கண்துஞ்சாமல் பணியாற்றியவர்
அதிமுக துணைப் பொதுச்செயலராக பொறுப்பேற்ற நாளில் இருந்து கட்சியை கரைசேர்க்க கண்துஞ்சாமல் பணியாற்றியவர் தினகரன். அதிமுக இலக்கை எட்டுவதற்கு காலம் தந்த சரியான தலைவர் தினகரன் என நான் நம்புகிறேன்.
அயோக்கியத்தனம்
தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் முயற்சித்தார் என கூறுவது அயோக்கியத்தனமான புகார். அமைச்சர்களுக்கு ஏதோ நிர்பந்தம் இருப்பதால்தான் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
பாஜகவே காரணம்
பாஜகவைப் பொறுத்தவரையில் சசிகலா குடும்பம் இல்லாத அதிமுகதான் இருக்க வேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரே என்னிடம் கூறியிருந்தார். தாம் கட்சியில் சுமையாக இருந்தால் விலகுகிறேன் என தினகரன் அறிவிக்கிற போதுகூட அவரிடம் எந்த ஒரு பதற்றமும் இல்லை.
பதற்றமில்லாதவர்
ஒரு மூக்குத்தி பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுவது போல பேசுகிறவர் டிடிவி தினகரன். எந்த ஒரு பதற்றத்துக்கும் தினகரன் ஆளாவது இல்லை. ஆயிரம் இடிகளையும் ஆயிரம் அவமானங்களையும் சகித்துக் கொள்கிற வல்லமை கொண்டவர் தினகரன். அவரால்தான் அதிமுகவுக்கு தலைமை தாங்க தகுதியானவர்.
36 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
தினகரனுக்கு 36 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வீட்டுக்கு வந்ததை நானே நேரில் பார்த்தேன். இருந்தபோதும் ஆட்சி கலையக் கூடாது என நினைக்கிறவர் தினகரன். அமைச்சர்களின் வீட்டு வாசலில் நிற்க வேண்டிய தேவை தினகரனுக்கு இல்லை. ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருந்தால் அதை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம். அதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது? தேர்தல் ஆணையத்தின் கையாலாகதனத்தையே இது வெளிப்படுத்துகிறது.
கனவில் விழுந்த கல்
அதிமுகவுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை எதுவுமே இல்லை. ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என கணக்குப் போட்டிருந்தேன். என் கனவில் கல் விழுந்துவிட்டது. நாங்கள் காயம்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.