நாஞ்சில் சம்பத்தைப் பார்த்தீங்களா.. என்ன பேசுனார்னு கேட்டீங்களா..!
தமிழகத்தின் அடுத்த முதல்வர் நானாக கூட இருக்கலாம் என்று நாஞ்சில் சம்பத் சீரியஸாக கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் நானாகவும் இருக்கலாம் என்று நாஞ்சில் சம்பத் கூறியது காமெடிக்காக இல்லை... சீரியஸாகவே யோசிக்க வைத்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும், டிடிவி தினகரன் ஆதரவாளரை முதல்வராக்க வேண்டும் என்பது சசிகலா குடும்ப உறவுகளின் வலியுறுத்தல்.
ஓ.பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்த எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்.
எங்கள் பக்கம் 40 எம்எல்ஏக்கள் வர தயாராக இருக்கின்றனர் என்று கூறி வருகிறார் திவாகரன். விரைவில் முதல்வரை மாற்ற வேண்டும். சபாநாயகர் தனபாலை முதல்வராக முன் நிறுத்தி வருகின்றனர். தலித் ஆதரவு எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுக்க தினகரன் தரப்பு முயற்சி செய்கிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், எங்களது ஒரே கோரிக்கை துரோகி பன்னீர்செல்வத்தை அமைச்சரவையில் இணைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்பதுதான் என்று கூறினார்
அப்போது செய்தியாளர்கள், 'எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகினால் யார் அடுத்த முதல்வர் என்று கேள்வி எழுப்பினர். 'ஏன் நான் கூட முதலமைச்சர் ஆகலாம்' என்று கூறினார். இது காமெடிக்கு கூறினாரா? அல்லது சீரியஸாக கூறினரா? என்று தெரியவில்லை.
தினகரன் ஆதரவாளர் ஒருவர் முதல்வராக வேண்டும் என்பதுதான் சசிகலா குடும்ப உறவுகளின் வலியுறுத்தல். இன்றைய அரசியல் சூழ்நிலையை பார்த்தால் யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை
இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் கர்நாடக மாநில செயலாளரும் புகழேந்தியும் தமிழக முதல்வராக நாஞ்சில் சம்பத் வரலாம் என்று கூறியுள்ளார்.