'அரசியல் அனாதை' கேபி முனுசாமி என்னை அதிமுகவில் இருந்து நீக்க சொல்வதா? நாஞ்சில் சம்பத் காட்டம்
அரசியல் அனாதையான கேபி முனுசாமி தம்மை அதிமுகவில் இருந்து நீக்க சொல்ல அருகதை இல்லை என நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
சென்னை: சசிகலா, தினகரனை புகழ்ந்து பேசும் தங்களை அதிமுகவில் இருந்து நீக்க சொல்ல அரசியல் அனாதை கேபி முனுசாமிக்கு அருகதை இல்லை என நாஞ்சில் சம்பத் காட்டமாக சாடியுள்ளார்.
அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை.
முனுசாமி கோரிக்கை
இதனிடையே சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் மற்றும் கர்நாடகா புகழேந்தி ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சசிகலா, தினகரனை புகழ்ந்து பேசுபவர்களை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியின் கேபி முனுசாமி வலியுறுத்தி இருந்தார்.
அரசியல் அனாதை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத், அரசியல் அனாதை கேபி முனுசாமி. என்னை கட்சியில் இருந்து நீக்க சொல்ல முனுசாமிக்கு அருகதை இல்லை.
கடைக்கால் இழந்த அணி
ஓபிஎஸ் அணியானது கடைக்கால் இழந்து நிற்கிறது. இன்னும் ஓரிரு திங்களில் ஓபிஎஸ் அணியின் பயணம் முடிவுக்கு வரும்.
நீதி கோரி பயணம்
தினகரனுக்கு நீதி கோரி நாங்கள் பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார். ஓபிஎஸ் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருக்கிறது. தினகரனுக்கு இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது என்றார்.