கமலை மிரட்டவோ திட்டவோ கூடாது... 'ஆர்டர்' போடும் நாஞ்சில் சம்பத்!
நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டவோ ஒருமையில் திட்டவோ கூடாது என தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டவோ ஒருமையில் திட்டவோ கூடாது என தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வாய்க்கு அவலாக கமல் சர்ச்சையில் சிக்குகிறார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை குறி வைத்து அமைச்சர்கள் தாக்குவதுதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக அரசின் ஊழல் குறித்து விமர்சித்த கமலை அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல்களும் வலுத்து வருகின்றது.
அரசின் ஊழல் குறித்து பேசிய கமலை தமிழக அமைச்சர்கள் அடிக்காத குறையாக மிரட்டி வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கமல் மிரட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊழல் நடக்கிறது என்றால் யார் செய்கிறார்கள் என்பதை கமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் நாஞ்சில் சம்பத் வலியுறுத்தியுள்ளார். அவல் எங்கே கிடைக்கிறது என ஸ்டாலின் ஏங்கிக்கொண்டிருக்கிறார் என்று கூறிய நாஞ்சில் சம்பத் இந்த நேரத்தில் கமல் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார் என்றும் கூறினார்.
தமிழ்திரைக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கும் எனில் அது நடிகர் கமலால் மட்டுமே என்றும் நாஞ்சில் சம்பத் புகழ்ந்தார். மேலும் கமலை ஒருமையில் பேசுவதும், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் மிரட்டக்கூடாது எனவும் நாஞ்சில் சம்பத் வலியுறுத்தினார்.