அழகிரியை மீண்டும் சேர்க்க திமுக மறுத்ததால்தான் விலகினேன்... நெப்போலியன்
சென்னை: மு.க.அழகிரியிடம் பாஜகவில் சேரப் போவதை சொல்லி விட்டுத்தான் வந்தேன். ஆனால் அவர் ஏன் இப்போது இப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை, மீண்டும் சேர்க்க திமுக மேலிடம் மறுத்ததால்தான் திமுகவை விட்டு விலக முடிவு செய்தேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் கூறியுள்ளார்.
பாஜகவில் இணைந்துள்ள நெப்போலியன், பாஜக தலைமைக் கழக அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியிலிருந்து...
திமுகவில் அடிப்படை தொண்டரான இருந்து செயல்பட்டதைவிட பா.ஜ.க.வில் தீவிரமாக செயல்படுவேன்.
மு.க.அழகிரி இப்போது திமுகவில் இல்லை. மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் தொடர்ந்து கட்சி தலைமையை வலியுறுத்திவந்தேன். ஆனால், எனது கருத்து ஏற்கப்படவில்லை. எனவே, திமுகவைவிட்டு வெளியேற முடிவு செய்தேன். மு.க.அழகிரியிடம் சொல்லிவிட்டுத்தான் பாஜகவில் சேர்ந்தேன். ஆனால், அவர் ஏன் இப்போது இப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.
அழகிரியும் பாஜகவில் இணைவாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல மீண்டும் அவர் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவது என்பது அவரது குடும்ப விவகாரம். அரசியல் முடிவாகவும் இருக்கலாம் என்றார் நெப்போலியன்.