மு.க.ஸ்டாலின் நெல்லித்தோப்பு தொகுதியில் பிரச்சாரம்: நாராயணசாமி தகவல்
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நெல்லித் தோப்பு தொகுதியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி தெரிவித்தார்.
சென்னை: நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க வருவதாக தெரிவித்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வரும் நவம்பர் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் புதுச்சேரியில் காலியாக உள்ள நெல்லித்தோப்பு தொகுதிக்கும் அதே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதிக்கு தற்போது புதுச்சேரி முதல்வராக இருக்கும் நாராயணசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நெல்லித்தோப்பு காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி இன்று சென்னையில் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் தி.மு.க.வின் ஆதரவை கேட்டதுடன், தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கி கூறி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். நெல்லித்தோப்பு தொகுதியில் என்னை ஆதரித்து வாக்குசேகரிக்க வருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். நவம்பர் 2ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன் என்றும் நாராயணசாமி கூறினார். இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடமும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோரியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.