புதுச்சேரியின் அடுத்த முதல்வர் "ஏர்போர்ட்" நாராயணசாமி...?
சென்னை: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை யார் முதல்வர் என்பதில் பெரும் குழப்பமே நிலவி வருகிறது. ஆனால் கடைசியாக வெளியாகி வரும் தகவல்களைப் பார்த்தால் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி அடுத்த முதல்வராகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.
புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அனேகமாக நாராயணசாமி தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான உத்தரவை காங்கிரஸ் மேலிடம் பிறப்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், கட்சி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் கலந்த கொள்ளவுள்ளனர்.
நாராயணசாமி முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். தற்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கிறார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தவர். சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்து "ஏர்போர்ட்" நாராயணசாமி என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்பட்டவர். இன்னும் சுருக்கமாக அவரை "நாசா" என்று கூட அழைத்தனர்.
எல்லாவற்றையும் கேஷுவலாக எடுத்துக் கொள்ளக் கூடியவர் நாராயணசாமி. யாரும் இவரிடம் சகஜமாக பழகி விட முடியும். மாற்றுக் கட்சியினரிடமும் அன்பு பாராட்டக் கூடியவர். உண்மையில் புதுச்சேரித் தேர்தல் முடியும் வரை நாராயணசாமி முதல்வர் ரேஸிலேயே இல்லை. மாநிலத் தலைவர் நமச்சிவாயம் பெயர்தான் முதல்வர் பதவிக்கு அடிபட்டு வந்தது. ஏன், நாராயணசாமி கூட நமச்சிவாயம் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என்று சொல்லித்தான் வாக்கு கேட்டு வந்தார்.
ஆனால் தேர்தல் முடிந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்ததுமே நாராயணசாமி மாறி விட்டார். அவரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் குதித்து விட்டார். டெல்லிக்குச் சென்ற அவர் அங்கு தனக்கே முதல்வர் பதவியைத் தர வேண்டும் என்று லாபி செய்ய ஆரம்பித்து விட்டார். இதை நமச்சிவாயம் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு ஆதரவாக டெல்லியில் பெரிய அளவில் லாபியும் இல்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி விட்டார் நமச்சிவாயம்.
நமச்சிவாயம் வேறு யாருமல்ல, முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மருமகன்தான். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான நமச்சிவாயத்தை கட்சித் தலைவராக்கி தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். இதன் மூலம் பெருவாரியான வாக்குகளை அள்ளலாம், ரங்கசாமிக்குப் போகும் வாக்குளை திசை திருப்பலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ். அது நினைத்தபடியே முடிவும் வந்தது.
இதில் விசேஷம் என்னவென்றால் தேர்தல் பிரச்சாரத்தில் அத்தனை காங்கிரஸ் தலைவர்களம் ஒற்றுமையுடன் பாடுபட்டனர், உழைத்தனர். தீவிரப் பணியாற்றினர். ஆனால் முடிவுக்குப் பின்னர் ஆளுக்கு ஒரு திசையாகப் போய் விட்டனர்.
நமச்சிவாயம், நாராயணசாமி தவிர முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோரும் கூட முதல்வர் பதவியைப் பிடிக்க முயன்று வந்தனர். ஆனால் இவர்களின் குரல் இப்போது தேய்ந்து விட்டது. நாராயணசாமியின் லாபியைப் பார்த்து வைத்திலிங்கம் ஒதுங்க, வைத்தியே ஒதுங்கி விட்டாரே என்று கந்தசாமியும் ஜகா வாங்கி விட்டார். ராகுல் காந்தி நம்மைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்ததால் கடைசி வரை களத்தில் இருக்கிறார் நமச்சிவாயம்.
என்ன விசேஷம் என்றால் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் நான்கு பேருமே நான்கு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். வைத்திலிங்கம் ரெட்டியார். கந்தசாமி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். நாராயணசாமி நாடார். நமச்சிவாயம் வன்னியர். இதில் புதுச்சேரியில் பெரும்பான்மையாக இருப்போர் வன்னியர்கள்.
தற்போதைய நிலையில் நாராயணசாமியின் கையே ஓங்கியிருப்பாக சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் நாளை நடைபெறும் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு தெரிந்து விடும்.
புதுச்சேரியுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்ட கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும், அஸ்ஸாம், மேற்கு வங்காளத்திலும் அமைச்சரவை பதவியேற்று அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கூட லேட்டாகாட்டி அப்புறம் காங்கிரஸ் "பாரம்பரியம்" என்னாவது பாஸ்!