தமிழக சட்டசபை முன்னவராக நத்தம் விஸ்வநாதன் நியமனம்!
சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை முன்னவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது முதல்வரானதை அடுத்து நத்தம் விஸ்வநாதன் பேரவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு பதவியேற்ற அ.தி.மு.க. அரசில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வம் பேரவை முன்னவராக நியமிக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். இதனையடுத்து முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம்.
இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேரவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ளார்.
பேரவையின் நேரத்தை மாற்றி அமைப்பது, கேள்வி நேரத்தை ஒத்திவைப்பது உட்பட முக்கிய தீர்மானங்களை பேரவை முன்னவர் கொண்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.