திருப்பரங்குன்றத்தில் நின்று மீண்டும் அமைச்சராக "நத்தம்" பிளான்... வளர்மதியும் காய் நகர்த்துகிறார்!
சென்னை: இடைத் தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுவதற்கு, தேர்தலில் தோற்ற முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர், மேலிடத்திடம் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏவான சீனிவேல், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 25 ம் தேதி மரணமடைந்தார்.
தேர்தல் ரிசல்ட் வெளியாகும் முன்பே மருத்துவமனையில் சுயநினைவு இன்றி சிகிச்சை பெற்றுவந்த சீனிவேலுக்கு, அவர் தேர்தலில் வெற்றி பெற்றதுகூட தெரியாமலே போனது.
இடைத்தேர்தல்
சீனிவேல் இறந்ததால், 6 மாதங்களுக்குள், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியது கட்டாயமாகும்.
மாஜிக்கள் லாபி
எனவே, இதை ஒரு வாய்ப்பாக எடுத்து திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு ஜெயித்து, அமைச்சராகிவிடலாம் என்று முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, வளர்மதி போன்றோர் லாபி செய்ய தொடங்கியுள்ளனராம்.
தோற்ற அமைச்சர்கள்
நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக முக்கிய புள்ளியான பெரியசாமிக்கு எதிராக களமிறக்கப்பட்டு தோற்றவராகும். கோகுல இந்திரா, சென்னை அண்ணா நகரிலும், வளர்மதி, ஆயிரம் விளக்கு தொகுதியிலும் திமுக வேட்பாளர்களிடம், தோல்வியை தழுவினர்.
வைத்திலிங்கத்திற்கு ராஜ்யசபா
ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியடைந்த வைத்திலிங்கம், ராஜ்யசபா அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஐவர் அணியினர்
வைத்திலிங்கமும், நத்தம் விஸ்வநாதனும், ஜெயலலிதாவிற்கு நெருக்கமான ஐவர் அணியில் இருந்தவர்கள். இதில் வைத்திலிங்கத்திற்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளதால், திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் வாய்ப்பை நத்தம் விஸ்வநாதனுக்கு வழங்க ஜெயலலிதா முடிவெடுக்கலாம் என தெரிகிறது.
மதுரை வளர்மதி - சிவகங்கை கோகுல இந்திரா
வளர்மதி மதுரையைச் சொந்த ஊராகக் கொண்டவர். கோகுல இந்திரா சிவகங்கையை சொந்த மாவட்டமாக கொண்டவர். இருப்பினும் இவர்கள் சென்னையில் பிரபலமானவர்கள், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்துக்காரர். வளர்மதி மதுரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர் அல்ல, பிள்ளைமார். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம். கோகுல இந்திரா முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்தான். இருப்பினும் நத்தம் விஸ்வநாதனுக்கு திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை நத்தம் மீது ஜெயலலிதாவுக்கு கோபம் இருக்குமாயின், சீனிவேலின் மகன், செல்வகுமாருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம்.