தொடங்கியது தனி ஆவர்த்தனம்... ஜெ.வுக்காக ஆதரவாளர்கள் சகிதம் 108 தேங்காய் உடைத்த 'நத்தம்'
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் முதல்வர் ஜெ. நலம்பெற வேண்டி 108 தேங்காய் உடைத்த நத்தம் விஸ்வநாதன் வழிபாடு நடத்தினார்.
சென்னை: அதிமுக நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் சென்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினர் தொடர்ச்சியாக பிரார்த்தனைகள், யாகங்கள், தேவாலய வழிபாடு, தர்கா தொழுகை என பிஸியாக இருக்கின்றனர். அமைச்சர் சீனிவாசன், எம்பி உதயகுமார், எம்எல்ஏக்கள் வேடசந்தூர் விபிபி பரமசிவம், நிலக்கோட்டை தங்கதுரை என அனைவரும் இணைந்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
இதுவரை அதிமுக நிகழ்ச்சிகளுக்கு நத்தம் விஸ்வநாதனை அழைக்கக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்றார் நத்தம் விஸ்வநாதன்.
அப்பல்லோ சென்று வந்த பின்னர் நத்தம் விஸ்வநாதனையும் அதிமுக நிகழ்ச்சிகளில் அழைக்கலாம் என சென்னையில் இருந்து அதிமுகவினருக்கு உத்தரவு போயுள்ளது. இதனால் மாவட்ட அதிமுக நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நத்தம் விஸ்வநாதன் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் திடீரென தனியாக நத்தம் விஸ்வநாதன் தமது ஆதரவாளர்கள் 20 பேருடன் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு 108 தேங்காயை உடைத்து வழிபாடு நடத்தினார். முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டிதான் 'அண்ணன்' இப்படி உருகி வழிபடுகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.