நெல்லை அருகே டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம்... கர்ப்பிணிப் பெண் மீது தடியடி
டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் நான்காவது நாளாக போராடி வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணி பெண்ணை போலீசார் அடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை : மக்கள் வந்து செல்லும் பாதையில் புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர், மேலும் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இதில் தாக்கப்பட்டுள்ளதால் நெல்லை அருகே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லைமாவட்டத்திலுள்ள தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதன்காரணமாக பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் சுரண்டை அருகேயுள்ள பரங்குன்றாபுரம் பகுதியில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கடை திறக்கப்பட்டது முதல் குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதன்காரணமாக பெண்கள் தனிமையில் எங்கும் சென்றுவரமுடியாத நிலையுள்ளதால் இந்தக்கடையை மூட மக்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் டாஸ்மாக் கடையை அகற்றிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
4வது நாளாக போராட்டம்
இதன்காரணமாக ஆகஸ்ட் 8ம் தேதி முதல் பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான நேற்று டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நான்காவது நாளாக இன்றும் ஏராளமான பெண்கள் கடை அமைந்துள்ள பகுதிக்கு திரளாக சென்றனர்.
வாக்குவாதம்
திரளாக வந்தப் பெண்களை கடைப்பகுதிக்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் பெண்கள் கடை அமைந்துள்ள பகுதிக்குள் சென்றனர். அவர்களை தடுத்தபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒருபெண்ணை காவலர் ஒருவர் கையால் தாக்கினார்.
தடியடி, மயக்கம்
செல்வம் என்ற கர்ப்பிணிபெண்ணை போலீசார் தள்ளிவிட்டதில் அவர் மயங்கி விழுந்தார்.உடனடியாக அனைத்து பெண்களும் அந்த பெண்ணை சுற்றி நின்று காவல்துறையை கண்டித்து ஒப்பாரி வைத்து அழுதனர். மேலும் போலீசார் தள்ளிவிட்டதில் மயக்கமடைந்த பெண்ணை உடனடியாக 108அம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்புடன் வியாபாரம்
டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய கர்ப்பிணிப் பெண் தாக்கப்பட்டதால் அங்கு பதட்டமான நிலை அங்கு உருவாகியுள்ளது. என்றாலும் திரண்டுவரும் குடிகாரர்களுக்கு தனி வழிஅமைத்துக்கொடுத்து போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும் டாஸ்மாக் மூடாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.