நெல்லை அருகே தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
நெல்லை அருகே முறையாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லை: நெல்லை அருகே முறையாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ளது புதூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்குட்பட்ட கண்ணுப்புலிமெட்டு, சதியன்மேடு, திரவன்காலனி, இரட்டைக்குளம், மோட்டை, தவணை, பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு, புதூர், கீழ புதூர், கேசவபுரம், இரவியதர்மபுரம், உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கியது.
இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க சில கிராமங்களில் மட்டும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில கிராமங்களில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
இதன்காரணமாக இந்த பேரூராட்சி பகுதியில் தர்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று லாலாக்குடியிருப்பு கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கூறி காலிகுடங்களோடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன்காரணமாக அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு நிலவியது.