13வது நாளாக பற்றி எரியும் நெடுவாசல்… விவசாயிகள், பெண்கள் இரவு பகலாக போராட்டம்!
தொடர்ந்து 13வது நாளாக இன்றும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர், தஞ்சை விவசாயிகள், மாணவர்கள் களத்தில் குதித்து
புதுக்கோட்டை: இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எடுக்க அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 13வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுத்துக் கொள்ள மத்திய அரசு 15 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனை நெடுவாசல் கிராம மக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் என தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
தங்கள் கிராமம் பாலைவனமாக மாறக் கூடாது என்றும், மலர் சாகுபடி அதிகம் செய்யும் இந்த கிராமத்தில் எந்த விவசாயத்தையும் செய்ய முடியாமல் போகும் அளவிற்கு மத்திய அரசின் சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம் என்றும் நெடுவாசல் மக்கள் சூளுரைத்து தொடர்ந்து 13வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
70 கிராம மக்கள் ஆதரவு
நெடுவாசலை சுற்றியுள்ள 70 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நெடுவாசலுக்கு வந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு இரவு பகலாக போராடி வருகின்றனர்.
மனித சங்கிலி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற உள்ளது. இது இல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பங்கேற்பு
இந்தப் போராட்டத்தின் பெரும் பலமாக இருப்பது பெண்கள்தான். தங்களது கைக் குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் பெண்கள் பங்கேற்று வருகின்றனர். மேலும், ‘குழந்தைகளுக்கு பள்ளி இல்லை, குடிக்க நீர் இல்லை இங்கே எதற்கு ஹைட்ரோ கார்பன்' என்று கேள்வி கேட்கும் பேனர்களை ஏந்தி குழந்தைகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
புதுக்கோட்டை நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று சென்னை, விழுப்புரம், அரியலூரைச் சேர்ந்த மாணவர்கள் பேரணி நடத்தி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இன்று தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.