நெடுவாசல் போராட்ட குழுவினர் ஸ்டாலினுடன் சந்திப்பு.. சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர கோரிக்கை
புதுக்கோட்டை நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போராட்டக் குழுவினர் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்ற பின்னர், இன்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
சென்னை: புதுக்கோட்டை நெடுவாசல் போராட்டக் குழுவினர், திமுக செயல் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது நெடுவாசல் பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் 22 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அப்போராட்டத்துக்கு வெளியூர் மக்களும் இளைஞர்களும் பெருமளவில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
நெடுவாசலில் 22 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடந்து வந்ததையடுத்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் போராட்டக் களத்துக்கு நேரில் வந்து மக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க மார்ச் 15 அல்லது 16 ஆம் தேதி ஏற்பாடு செய்கிறேன் என பொன்.ராதா கிருஷ்ணன் வாக்குறுதி கொடுத்தார்.
அதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களை நேரில் சென்று சந்தித்து, ஹைட்ரோ கர்பன் திட்டம் கண்டிப்பாகக் கொண்டுவ்ரப்படமாட்டாது என உறுதியளித்ததைத் தொடர்ந்து, கடந்த 9 ஆம் தேதி போராட்டம் தற்காலிகமாக வாப்ஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்தனர். அந்தச் சந்திப்பின்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்படுவது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மு.க ஸ்டாலினும் அவர்களது கோரிக்கை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.