தகுதி தேர்வு எழுத வேண்டாம்.. ஐகோர்ட் தீர்ப்பால் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாலி...
சென்னை: சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டு அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
இதனால் 2011ம் ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்கப்படாமல் இருந்தது. இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி சிறுபான்மை பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் 300 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர்.
நீதிபதிகள் குலுவாலி ரமேஷ், முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால் அதில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் குலுவாலி ரமேஷ் மற்றும், முரளிதரன் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகளின் இந்தத் உத்தரவால் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவை கிடைக்க வழி வகை ஏற்பட்டுள்ளது.