நகை பறித்த ஆசிரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நீராவி முருகன்; பிப்.11 வரை காவல்
சென்னை: துரைப்பாக்கத்தில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் கைதான தூத்துக்குடி நீராவி முருகன், அதே இடத்தில் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் நடித்துக் காட்டி விட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துரைப்பாக்கம் எம்.சி.என். நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை வேலத்திடம், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தை மாடியில் நின்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி, தனது செல்போன் கேமரா மூலம் பதிவு செய்தார். அந்த மாணவி, அதை வாட்ஸ் அப் மூலம் தனது தோழிகளுக்கு அனுப்பினார்.
தோழிகள் தனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பினர். இவ்வாறு அந்தக் காட்சி சென்னை நகரம் முழுவதும் பரவியது. இதன் விளைவாக துரைப்பாக்கம் போலீஸார் அந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி கொள்ளையர்கள்
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் வேலத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டியது தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சேர்ந்த ரவுடி நீராவி முருகன் என்பதும், மோட்டார் சைக்கிள் ஓட்டியது தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது.இதில் ஹரிகிருஷ்ணனை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.
முக்கிய எதிரியான நீராவி முருகன் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் தனிப்படையினர் தீவிர விசாரண நடத்தி, நீராவி முருகனை சில தினங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் பிடித்தனர்.
பிடிபட்ட முருகனை போலீசார் விசாரணை செய்வதற்கு சென்னைக்கு அழைத்து வந்தனர். ரகசிய இடத்தில் முருகனிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
55 இடங்களில் நகை பறிப்பு
அப்போது நடந்த விசாரணையின் போது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திண்டுக்கல் உள்பட பல இடங்கிளல் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது செயின் பறிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுவரை 55 பெண்களிடம் நீராவி முருகன் சங்கலி பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை வழக்கு
தூத்துக்குடியில் கடந்த 2011-ஆம் ஆண்டு தி.மு.க. பிரமுகர் ஏ.சி.அருணாவை கொலை செய்த வழக்கில் போலீசாரால் நீராவி முருகன் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்து, பின்னர் அதே ஆண்டு மே மாதம் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை நீதிமன்றததில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
ஜாமீனின் வந்து
ஜாமினில் வந்த நீராவி முருகன், அடுத்தடுத்து வழிபறி, வீடு புகுந்து கொள்ளை அடித்து வந்தள்ளார். கடந்த மாதம் 19-ந்தேதி துரைப்பாக்கத்தில் ஆசிரியை வேலத்திடம் செயின் பறித்துள்ளார் நீராவி முருகன், கல்லூரி மாணவி ஒருவர் தனது செல்போனில் அந்தகாட்சியை படம் பிடித்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பியதால், தற்போது போலீஸில் சிக்கியுள்ளார்.
மன்னிப்பு கேட்டான்
இந்த நிலையில் துரைப்பாக்கம் எம்.சி.என். நகருக்கு அழைத்து வரப்பட்ட நீராவி முருகன் சம்பந்தப்பட்ட பெண்ணான வேலம் காலில் விழுந்து மன்னிப்பு கோரினான்.
மேலும் ஆசிரியையிடம் சங்கிலி பறித்தது எப்படி? என்று கொள்ளையன் நீராவி முருகன் பொதுமக்கள் மத்தியில் நடித்துக் காட்டினான்.
நீதிமன்ற காவல்
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் நீராவி முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வரும் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மொட்டை போட்ட கான்ஸ்டபிள்கள்
நீராவிமுருகனை கைது செய்த போலீஸ் ஏட்டுக்கள் இருவர் சபதம் முடிந்ததால் நேற்று மொட்டை போட்டுக்கொண்டனர்.