தப்பி ஓட முயன்றாரா நீராவி முருகன்?.. கை கால் முறிந்த நிலையில் கோர்ட்டில் ஆஜர்!
சென்னை: ஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்த கொள்ளையன் நீராவி முருகன், போலீசிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற போது அவனது கை கால்கள் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயங்களுடனேயே அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி வேலம் (வயது 37). தனியார் பள்ளி ஆசிரியையான இவர் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் நாள் தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்தனர். அவர்களில் ஒருவன் ஆசிரியை வேலத்திடம் கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். பின்னர் இருவரும் கூலாக தப்பித்தனர்.
இந்த காட்சியை இளம்பெண் ஒருவர் செல்போன் கேமராவில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பரப்பினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையர்கள் இருவரும் ஹரிகிருஷ்ணன், நீராவி முருகன் என்பது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த மாதம் 26ஆம் தேதி ஹரிகிருஷ்ணன் என்பவனை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் கேமராவில் பதிவான கொள்ளையன் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவனை ஞாயிறன்று நெல்லையில் துப்பாக்கி முனையில் கைது செய்து சென்னைக்கு கொண்டுவந்தனர். இவன் மீது ஏராளமான வழிப்பறி, கொள்ளை கொலை வழக்குகள் உள்ளன.
உல்லாச வாழ்க்கை
நீராவி முருகன் வடபழனி, கோடம்பாக்கம், பாரிமுனை போன்ற பகுதிகளில் கல்லூரி மாணவர்களின் அறைகளில் தங்கியிருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு வழிப்பறிக்கும் ஒவ்வொருவரை உடன் அழைத்துச் செல்வான். கொள்ளை முடிந்ததும் உடனே சிறிது தூரம் சென்று உடைகளை மாற்றிக்கொண்டு தப்பிவிடுவான். கொள்ளையடிக்கும் பணத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தான்.
ஆந்திராவிற்கு ஓட்டம்
துரைப்பாக்கத்தில் வழிப்பறி செய்த காட்சிகள் வெளியானதால் ஆந்திராவுக்கு தப்பி ஓடிவிட்டான். அங்கு நகையை விற்ற பணத்தை கொண்டு தனது கள்ளக்காதலியுடன் ஒரு மாதம் உல்லாசமாக இருந்தான். பின்னர் நாகர்கோவிலுக்கு செல்வதற்காக ஆந்திராவில் இருந்து நெல்லை வந்தான்.
துப்பாக்கி முனையில்
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள அவனது குடும்ப கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தான். இதுபற்றி தூத்துக்குடி நண்பனுக்கு தகவல் தெரிவித்து நெல்லை பஸ் நிலையத்திற்கு வரும்படி கூறினான். அந்த நண்பனை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.
மொட்டை போட்டான்
போலீசாருக்கு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக நீராவி முருகன் காளஹஸ்தி கோவிலில் மொட்டை போட்டு இருந்தான் நெல்லை பஸ் நிலையத்தில் நீராவி முருகனை அந்த நண்பன் அடையாளம் காட்டியதும் போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
நடித்துக் காட்டினான்
இந்த நிலையில் துரைப்பாக்கத்தில் பொதுமக்கள் மத்தியில் நடித்து காட்டிய நீராவி முருகனின் கூட்டாளியை அடையாளம் காட்டுவதற்காக போலீசார் நேற்று அவனை பாரிமுனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். முத்துசாமி பாலம் அருகே சென்றபோது சிறுநீர் கழிக்க வேண்டும் என நீராவி முருகன் கூறியதால் போலீசார் அனுமதித்தனர். ஆனால் நீராவி முருகன் திடீரென பாலத்தில் இருந்து குதித்து தப்பிச்செல்ல முயன்றான்.
முறிந்த கால்கள்
பாலத்தில் இருந்து குதித்ததில் வலது கையும், இடது காலும் முறிந்தன. இதனால் தப்பி ஓட முடியாமல் வலியால் துடித்தான். உடனே போலீசார் முருகனை பிடித்துக்கொண்டுவந்து கை, கால் முறிவுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் நேற்று பகல் 12 மணிக்கு ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு அவனை வேனில் அழைத்து வந்தனர்.
நீதிமன்ற காவல்
நாற்காலியில் அமரவைத்து முருகனை போலீசார் தூக்கி வந்து மாஜிஸ்திரேட்டு வித்யா முன் ஆஜர்படுத்தினர்..அவர் நீராவி முருகனை 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மருத்துவ சான்று தாக்கல் செய்யவும் போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்
போலீஸ் காவலுக்கு மனு
நீராவி முருகனிடம் நிறைய விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க துரைப்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான மனு ஆலந்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.