நீட்.. தெளிவாக்கியது தமிழக அரசு... 85% மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே!
சென்னை: நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை இன்று தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதையடுத்து மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் 27ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டசபையில், நீட் தேர்வு தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசினார்.
மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், நீட் தேர்வில் பங்கேற்றவர்களில், மாநில பாட திட்ட மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிபிஎஸ்இ பாட திட்ட மாணவர்களுக்கு 15% இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த 22ஆம் தேதி வெளியிடப்பட்டது என்றார்.
இழப்பை ஈடு கட்ட இட ஒதுக்கீடு
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற முடியாததால் மாணவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு கட்டும் வகையில் 85 சதவிகித இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் கூறினார்.
நீட் ரிசல்ட்
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதைத் தொடர்ந்து மருத்துவக் கலந்தாய்வுக்கான தேதியை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நீட் தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கலந்தாய்வு துவங்க இருப்பதால் எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பம் வருகிற ஜூன் 27ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
ஜூலை 17க்குப் பின் கலந்தாய்வு
மாணவர் சேர்க்கைக்கான கொள்கை விளக்கங்கள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும், மத்திய அரசு ஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்தவுடன் தமிழகத்தில் ஜூலை 17ஆம் தேதி அல்லது அதன் பிறகு கலந்தாய்வு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.