நீட் தேர்வை பாஜக கொண்டு வந்ததே சமூக நீதியை கெடுக்கத்தான்.. மு.க ஸ்டாலின் அட்டாக்
பாஜக அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியதே தமிழகத்தில் நிலவும் சமூக நீதியைக் கெடுக்கத்தான் என்று மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வை கட்டாயமாக்கி சமூக நீதியை பாஜக கெடுத்துள்ளது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று திடீரென உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. அதனால் நீட் தேர்வு அடிப்படையில் செப்டம்பர் 4-க்குள் மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, நீட் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இன்று திமுக தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்தக் கூட்டத்தில் தலைமை வகித்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
நீட்டை கட்டாயமாக்கிய பாஜக
திமுக தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 18.7.2013 அன்று வழங்கிய அந்தத் தீர்ப்பை திரும்பப் பெறுவதற்கு காரணமாக இருந்த ஆட்சிதான் இப்போது மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்த விசாரணை முடிவதற்கு முன்பே, நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நீட் தேர்வு கட்டாயம் என்பதை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் அலட்சியம்
நீட் தேர்வு குறித்துத் தீர விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 11.4.2014ல் விரிவாகக் கூறியிருக்கிறது. ஆனால் இதுவரையில் மத்திய அரசு அதுகுறித்து பொருட்படுத்தவில்லை. அதே போல் மாநில அரசும் இதுகுறித்து சிந்தித்துப் பார்க்கவில்லை.
திணிப்பு
விரும்பாத மாநிலங்களை விட்டுவிட்டு நீட் தேர்வை நடத்த நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது. ஆனாலும் அதையும் மீறி நீட் தேர்வை புகுத்தி இருக்கிறது பாஜக.
நீதிபதி சுளீர் கேள்வி
நீட் தேர்வு பற்றிய வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சிபிஎஸ்இ பாடத்திட்டக் கேள்விகளை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களால் எப்படி எதிர் கொள்ள முடியும் என்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார். மேலும், மாறுபட்ட பாடத்திட்டம் இருக்கும் போது எப்படி ஒரே மாதிரி கேள்வி கேட்கப்படும் என்றும் நீதிபதி கேட்டுள்ளார். கேள்வித் தாள் தயாரிக்கவும் நடுநிலையான அமைப்பை உருவாக்கி இருக்க வேண்டாமா என்றும் அவர் கேட்டுள்ளார்.
ரத்தால் பலன் அதிகம்
தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ சேர்க்கை நடைமுறை உள்ளது. அதனைக் கொண்டு வந்தது திமுக ஆட்சி. நுழைவுத் தேர்வு ரத்து செய்ததால் மாணவர்கள் அடைந்த பலன் அதிகம்.
சமூக நீதியைக் கெடுக்க..
சமூக நீதியைக் கெடுக்கத்தான் நீட் தேர்வை பாஜக ஆட்சி கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கை நசுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாவதை பாஜக விரும்பவில்லை.
கேவலப்படுத்திய பாஜக
இதனை எல்லாம் இன்று கைக்கட்டி தமிழக அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் 2 மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அவை இருட்டறையில் முடக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு தமிழக சட்டசபையைக் கேவலப்படுத்தி இருக்கிறது.
மாநிலப் பிரச்சனை
தமிழக உரிமைகளை ஒட்டு மொத்தமாக மத்தியில் அடகு வைத்திருக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு பிரச்சனை மாணவர்கள் பிரச்சனை மட்டும் அல்ல; இது மாநிலப் பிரச்சனை. எனவே, அதனை மீட்டெப்பது நமது கடமை என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.