நீட் தேர்வு.. எச். ராஜா பேச்சைத்தான் மத்திய அரசு கேட்கிறது.. பிரின்ஸ் கஜேந்திர பாபு காட்டம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று எச். ராஜா சொன்னதைத்தான் மத்திய அரசு கேட்டு நடந்துள்ளது என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தொடர்பான பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேச்சைத்தான் மத்தியில் இருக்கும் பாஜக அரசு கேட்டு நடக்கிறது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் நீட் தேர்வில் தொடர்பான இரு தரப்பினர் இருக்கின்றனர். இதில் ஒருவர் பிரிவினருக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் கருதியது.
பாதிக்கப்பட்டவர்கள் கருத்து புறக்கணிப்பு
இரண்டு தரப்பினருக்கும் பாதிப்பில்லாமல் முடிவெடுக்க மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டது. இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு ஏற்பு அளிக்கப் போவதில்லை என்றும் நீட் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்க எந்தச் சிக்கலும் இல்லை என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. இப்படிச் சொன்னதன் மூலம் இன்னொரு தரப்பினரின் பாதிப்பு குறித்து மத்திய அரசு வாயே திறக்கவில்லை.
உச்சநீதிமன்றத்தைப் பயன்படுத்தியுள்ளது பாஜக
இது நியாயத்திற்குப் புறம்பானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் அமைப்பு சட்டத்தின் நோக்கத்திற்கும், சமத்துவக் கோட்பாட்டிற்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது வேதனையளிக்கிறது. உச்சநீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி பாஜகவின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.
எச். ராஜா எதிர்ப்பு
பிரதமர் தலைமையில் 3 அமைச்சர்கள் தமிழ்நாட்டில் எழுந்திருக்கக் கூடிய நீட் சிக்கல் பற்றி விவாதித்து அறிக்கை தருவார்கள் என்று சொன்ன உடன், எச். ராஜா தேசிய தலைவர், தமிழகத்தில் இருந்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். அதில், நீட்டுக்கு விலக்கு அளிக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டார்.
குப்பையில் வீசப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம்
பாஜகவின் தேசிய செயலாளர் சொன்னதுதான் இன்று நடந்திருக்கிறதா? அரசியல் அமைப்புச் சட்டம் குப்பையில் வீசப்பட்டுள்ளதா? உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறிய கருத்துக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கப் போவதில்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன.
தமிழக அரசின் மவுனம் ஏன்
இந்த மிகப் பெரிய துரோகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது கேள்வி. தமிழக அரசு இன்றும் கூட ஏன் மருத்துவ கவுன்சிலிடம் முறையிடவில்லை? ஏன் மறுசீராய்வு மனு செய்யவில்லை என்று கஜேந்திர பாபு கேள்வி எழுப்பினார்.