'நீட்' தேர்வுக்கு ஓராண்டாவது விலக்கு கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான்; திருநாவுக்கரசர் அட்டாக்
நீட் தேர்வுக்கு ஓராண்டுக்காவது விலக்கு அளிக்குமா மத்திய அரசு என்பது கேள்விக் குறியே என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை வழக்கமாக நடந்து வந்தது. இதனை மாற்றி நீட் தேர்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.
இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கத் தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் நிரந்தரமாக விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி அவசரச் சட்ட வரைவை மத்திய அரசிடம் கொடுத்தது. அது இன்னமும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஓராண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டால் அது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று கூறினார்.
இதுகுறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறிய போது, ஓராண்டுக்கு விலக்கு என்று நிர்மாலா சீதாராமன் தற்போது கூறியதை முதல்வரிடம் பிரதமர் மோடி ஏன் கூறவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த ஓராண்டுக்கு மட்டும் விலக்கு என்பது கூட கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.