நீட் தேர்வு விலக்கு கிடையாது... மாணவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம்.. கல்வியாளர்கள் கொதிப்பு!
நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை : நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்க கிடையாது என்று சுப்ரீம்கோர்ட் கூறிய நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஏனெனில் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து கல்வியாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை கேட்கலாம். சமூக சமத்துவ மருத்துவர் சங்கத்தை சேர்ந்த ரவீந்திரநாத் கூறியதாவது: நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டது. நீட் விலக்கு கோரி தமிழக சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன, ஆனால் அதை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. நீட் தேர்வில் விலக்கு கோரி மாணவர்கள் போராடி வந்தனர். இதனிடையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓராண்டு விலக்கு அளிப்பதாகக் கூறினார்.
இரட்டை நிலை
ஆனால் இன்று அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் தர முடியாது என்று கூறியுள்ளது. பாஜகவின் இரட்டை நிலையையே இது காண்பிக்கிறது, ஒரு பக்கம் அவசரசட்டம் கொண்டு வரச் சொன்னார்கள், மற்றொருபுறம் நீதிமன்றத்தில் ஒப்புதல் தர முடியாது என்று கூறுகின்றனர். மத்திய அரசே அவசர சட்டம் கொண்டு வந்தால் இந்த விவகாரத்தில் எந்த பிரச்னையும் இருக்காது.
மத்திய அரசே சட்டம் போட வேண்டும்
நீதிமன்றம் சொன்னாலும், கொள்கை முடிவுகள் எடுப்பது நாடாளுமன்றம் தான் எனவே தமிழக அரசு மத்திய அரசுக்கு அந்த அழுத்தத்தை கொடுக்க வேண்டும். மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் விஷயத்தில் அதை சரி செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று கூறினார்.
மாணவர்கள் பாதிப்பு
இதே போன்று கல்வியாளர் சோமசுந்தரம் நீட் விலக்கு குறித்து கூறுகையில் : இந்த வருடமாவது நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கேள்வித் தாள் கொடுத்துள்ளார்கள் இது எப்படி ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழிசை வரவேற்பு
நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளார். இதற்கு முன்னர் ஒரு முறை கட் ஆப் கிடைக்கவில்லை என்றால் மருத்துவ இடம் கிடைக்காது. ஆனால் தற்போது நீட் முறையால் 3 முறை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், 25 வயது வரை மருத்துவ படிப்புக்கு சேரலாம். ஆனால் இது தமிழக அரசியல்வாதிகளால் திரித்து கூறப்படுகிறது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எதிர்கால மாணவர்களுக்கு இது உதவும்.