நீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி நாளை மறுநாள் மதிமுக போராட்டம்!
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோரி ஆகஸ்ட் 10-ஆம் தேதி மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து மதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 10-இல் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
நீட் என்ற தேர்வு நடத்தப்பட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கை நடைபெறும் வகையில் அந்த தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படும் என்பதால் அந்த தேர்வுக்கு தமிழகம், புதுவை எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கவில்லை. மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து மாணவர்களும், பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்துக்கு விலக்கு தர கோரியும் மதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 10-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
இதேபோல் அதிமுக புரட்சித் தலைவி அணியும் நீட் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.