நெல்லை கிறிஸ்துவ ஆலய கட்டிட விபத்து – கலெக்டர் கருணாகரன் பேட்டி
நெல்லை: பாளையங்கோட்டை சேவியர் காலனி கிறிஸ்தவ ஆலயம் இடிந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டார்கள். மீட்பு பணிகளை முடுக்கிவிட்ட நெல்லை கலெக்டர் மு.கருணாகரன் இது சம்பந்தமாக பேட்டியளித்துள்ளார்.
அதில், "கிறிஸ்தவ ஆலயத்தில் மேற்கூரை அமைக்கும் போது கான்கீரிட் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பலரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள், போலீசார், செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்துவோம். முதலில் விபத்துக்கான காரணங்களை நாங்கள் ஆராயவில்லை. சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதன் பிறகு எந்த காரணத்தால் இந்த சம்பவம் நடந்தது? முறையாக மாநகராட்சி அனுமதி பெறப்பட்டதா? என்று விசாரணை நடைபெறும்.
கிறிஸ்தவ ஆலயத்தின் கட்டுமானப்பணி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் எடுத்து இருந்தார்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, கடையம், வீரகேரளம்புதூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களை வைத்து கட்டுமான பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
கவனக்குறைவு மற்றும் இரவு நேரத்தில் அதிக ஆட்களை வைத்து வேலை வாங்கியதுதான், 3 பேர் சாவுக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.