தொழிலதிபரை கடத்தி காலில் விழவைத்த திமுக முன்னாள் துணைமேயர் கைது…
சென்னை: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி சரமாரியாக அடித்து உதைத்து காலில் விழவைத்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் உட்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோபாலபுரம் பத்மாவதி தாயார் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த இருதினங்களுக்கு முன்னர் இரவு 4 பேர் காரில் வந்தனர். அவர்கள் தன்ராஜிடம் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்து உதைத்து அவரை காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் நள்ளிரவில் ரத்தக் காயங்களுடன் தன்ராஜ் வீடு திரும்பவே நிம்மதியடைந்த போலீசார், தன்ராஜை அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முன்னாள் துணைமேயர் கைது
அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து திருநெல்வேலி மாநகராட்சி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் (45) மற்றும் அயனாவரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
கடத்தியது ஏன்
திருநெல்வேலி மாநகராட்சி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், நிலம் வாங்கு வது தொடர்பாக தன்ராஜை அணுகி யுள்ளார். இதையடுத்து நிலம் வாங்கித் தருவதாக கூறி முத்துராமலிங்கத்திடம் இருந்து ரூ.12 லட்சத்தை தன்ராஜ் வாங்கினாராம். ஆனால் சொன்னபடி நிலம் வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் தன்ராஜ் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
காலில் விழுந்து மன்னிப்பு
அதனால் பிரகாஷ் உள்ளிட்டோர் தன்ராஜை காரில் கடத்திக் கொண்டு, தியாகராயநகரில் உள்ள முத்துராமலிங்கம் வீட்டுக்கு சென்று உள்ளனர். அங்கும் தன்ராஜை அடித்து உதைத்து முத்துராமலிங்கத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். பின்னர் தன்ராஜை விட்டுவிட்டனர். இதனையடுத்து ரத்தக்காயங்களுடன் வீடு திரும்பிய தன்ராஜை மருத்துவமனையில் சிகிக்சைக்காக போலீசார் அனுமதித்தனர்.