மனைவிக்கு தெரியாமல் பள்ளி மாணவியை மணந்த ஹோட்டல் அதிபர் கைது
நெல்லை: குழந்தையின்மையைக் காரணம் காட்டி, மனைவியை விரட்டி விட்டு 9ம் வகுப்பு பள்ளி மாணவியைத் திருமணம் செய்த ஹோட்டல் உரிமையாளரை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் வானுமாமலை (29). நாங்குநேரியில் ஹோட்டல் நடத்தி வரும் இவரது மனைவி பெயர் மங்களம். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இத்தம்பதிக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் மங்களத்தை வீட்டை விட்டு வெளியேற்றினார் வானுமாமலை. இதனால் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் மங்களம்.
இந்நிலையில், மங்களத்திற்குத் தெரியாமல் சமீபத்தில் நாங்குநேரி அருகே உள்ள மாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை 2-வது திருமணம் செய்து கொண்டார் வானுமாமலை.
தகவல் அறிந்த மங்களம் இது தொடர்பாக நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நாங்குநேரி கிராம நிர்வாக அதிகாரி கிறிஸ்தவ செல்வி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், வானுமாமலை 15 வயதுள்ள மாணவியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கிறிஸ்தவ செல்வி நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். மேலும் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டியதாக வானுமாமலை மீது மனைவி மங்களமும் புகார் செய்தார். அவர்களது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வானுமாமலை மீது 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
பின்னர், வானுமாமலையைக் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.