நெல்லையை உலுக்கும் கள்ளத் துப்பாக்கிகள்... சிக்கினார் அதிமுக பிரமுகர் மகன்!
நெல்லை: நெலலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் அதிமுக பிரமுகரின் மகன் உள்பட 4 பேர் கள்ள தூப்பாக்கியுடன் சிக்கினர். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மீண்டும் நெல்லையில் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவி வருவதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நெல்லை மாநகர பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டையில நடந்த வாகன சோதனையின் போது பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பதில் முன்னுக்கு பின்னாக இருக்கவே சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து பரிசோதனை செய்தனர்.
அப்போது அந்த நபரிடம் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பாளை சேவியர் காலனியை சேர்ந்த சுடலைக்கண்ணு என்பது தெரிய வந்தது. நெல்லை தச்சநல்லூர் அதிமுக பிரமுகரின் உறவினரான இவர் வண்ணார்பேட்டையை சேர்ந்த முகேஷ்குமாரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்கியதாகவும், பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செயயபபட்ட துப்பாக்கி காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்தும் உயர் ரகத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இது ஒரே ரவுண்டில் 12 முறை சுடும் திறன் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.
நெல்லை மாநகரில் மேலும் இதுபோல் கள்ள துப்பாக்கி பலரிடம் புழக்கத்தில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக முகேஷ்குமார், பாளையங்கோட்டையை சேர்ந்த பிரேம்குமார், ஸ்டாலின் பிரபாகரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.