நெல்லை அருகே பூனையை பார்த்து சிறுத்தை என பயந்த மக்கள்.. வனத்துறையினர் ரோந்து
நெல்லை: விகேபுரம் அருகே சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகே அனவன்குடியிருப்பு அருகே உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாபநாசம் வனச்சரகர் பாரத் தலைமையில் வனவர் மோகன்தாஸ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்பகுதி பாறை இடுக்கில் இருந்து வெளிவந்த உருவத்தை பார்த்து அது காட்டு பூனை என தெரிய வந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பொது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் இப்பகுதியை பார்வையிட்டோம்.
மக்கள் பார்த்தது சிறுத்தை புலி அல்ல. காட்டுபூனை என தெரிந்தது. எனவே மக்களிடம் அச்சப்பட தேவையில்லை என்று எடுத்து கூறியுள்ளோம். இதனிடையே இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பொது மக்களும், மாணவர்களும் திரண்டனர். இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்தது குறிப்பிடத்தக்கது.