கெளரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்; இல்லையெனில் போராட்டம் - ஆர்.நல்லக்கண்ணு
சென்னை: தமிழகத்தில் கெளரவ கொலைகளை தடுப்பதற்கான தனிச்சட்டத்தை அமல்படுத்தவில்லையென்றால் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழகத்தில் கெளரவக் கொலைகளை தடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட கெளரவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதனை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. கோகுல்ராஜ் விவகாரத்தில் அவரை கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கெளரவக் கொலைகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. கெளரவக் கொலைகளை தடுக்க தேசிய சட்ட ஆணையம் 2011 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் தமிழக அரசு இதனை அமல்படுத்தவில்லை.
இனிமேலும் மவுனம் சாதிக்காமல் இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்தவேண்டும். கெளரவக் கொலைகளை தடுப்பதற்கான இந்த தனிச்சட்டத்தை அமல்படுத்தவில்லையென்றால் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.