பலாத்கார குற்றவாளியுடனேயே சமரசம்: ஹைகோர்ட் உத்தரவால் மிரட்டப்படும் அபலைப் பெண்!
சென்னை: பலாத்காரம் செய்த குற்றவாளியுடனேயே பாதிக்கப்பட்ட பெண் சமரசமாக போக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் உத்தரவு பிறப்பித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்த உத்தரவுக்குப் பின்னர் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி வருவதாக அதிரவைக்கும் புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2009-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவன் மோகன்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மோகன் முறையீடு செய்தபோது, அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டேன் என்று சொன்னார். இந்நிலையில், தற்போது அந்தப் பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ள நிலையில், இருவரும் சமரச மையத்தில் தீர்வு காணலாம் என்று சொல்லி மோகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ்.
இதற்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணோ அதிரவைக்கும் புகார்களை தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அந்த பெண் அளித்துள்ள பேட்டி:
மோகனின் மேல்முறையீட்டு மனு குறித்து உயர்நீதிமன்றம் எங்களிடம் எந்தவொரு கருத்தையும் கேட்காமல், அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடே இல்லை.
நான் சமரசத்துக்கு செல்லவே மாட்டேன். என் விருப்பத்தோடத்தான் உறவு கொண்டதாக நீதிமன்றத்துல அவர் கூறியுள்ளது சுத்தப் பொய். என்னை திருமணம் செய்வதாக சொல்லி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் மோகன்.
ஆனால் நிச்சயம் அவர் என்னை திருமணம் செய்ய மாட்டார். அப்படியே திருமணம் செய்தாலும் சேர்ந்து வாழாமல் டைவர்ஸ் செய்துவிடுவார்.
தற்போது, ஒழுங்கா என்னை திருமணம் செய்து கொண்டு பண்ணிக்கிட்டு கேஸ்ல இருந்து வெளியில கொண்டு வந்துவிடு.. நான் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்.. நீ வேற வழியை பார்த்துக் கொள் என மிரட்டுகிறார் மோகன். அப்படி செய்யவில்லை எனில் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் அதிர வைக்கும் புகார்களை அடுக்கி வருகிறார்.