தமிழகத்துக்கு விரைவில் முழு நேர ஆளுநர் நியமிக்கப்படுவார்: வெங்கய்ய நாயுடு உறுதி
தமிழகத்துக்கு விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்துக்கு விரைவில் முழுநேர ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசையாவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்ததது. இதையடுத்து தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமித்திருக்க வேண்டியது மத்திய அரசின் பணி.
ஆனால் ஒரு மாநிலத்துக்கு ஆளுநரைத் தேர்வு செய்யாமல் அமைதியாக இருக்கிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. தமிழகத்துக்கு இன்னமும் மகாராஷ்டிரா ஆளுநரான வித்தியாசகர் ராவுதான் பொறுப்பு ஆளுநராக நீடித்து வருகிறார்.
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் போன்றவற்றை மத்திய அரசு கவனத்தில் கொண்டு தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரை இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நியமனம் செய்ய முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார்.
விழா முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''யாராக இருந்தாலும் முதலில் அவரவர் தாய்மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு பல மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. படிக்கும் போதே ஆங்கில மொழிய கற்றுக் கொள்கிறோம். இந்தியை கற்றுக் கொள்வதில்லை தவறு இல்லை. தமிழகத்துக்கு விரைவில் நிலையான ஆளுநர் நியமிக்கப்படுவார் என்றார்