வட தமிழக திமுக மாஜிகளுக்கு வலை.. "திருவண்ணாமலை"யும் விழுந்தது.. கலக்கத்தில் அறிவாலயம்!
வட தமிழகத்தில் கல்வித் தந்தைகளாக கோலோச்சும் மாஜி திமுக அமைச்சர்களுக்கு வலைவிரிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவாலயம் கதிகலங்கி போயுள்ளதாம்.
சென்னை: வடதமிழகத்தில் கல்வித் தந்தைகளாக வலம் வரும் மாஜி திமுக அமைச்சர்களுக்கு வலைவிரிக்கப்பட்டுள்ளதாக அடுத்தடுத்து வரும் செய்திகளால் அண்ணா அறிவாலய தலைமை கதிகலங்கி போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக சுக்கு நூறாக சிதைந்து கொண்டே போகிறது. அதிமுக என்கிற பெயர் இருக்கும்.. ஆனால் தொண்டர்கள் இருப்பார்களா? என்கிற நிலைமையை நோக்கி சென்றுவிட்டது அக்கட்சி.
இதையடுத்து திமுகவுக்கும் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவினரை புத்தம் புதிதாக பிறக்கப் போகும் கட்சி மூலமாக சுற்றி வளைத்து போடுவது என்பதுதான் அஜெண்டாவாக இருக்கிறதாம்.
திமுக மாஜி அமைச்சர்கள்
இதன் முதல் கட்டமாகத்தான் வடதமிழகத்தில் கல்வித் தந்தைகளாக வலம் வரும் திமுக மாஜி அமைச்சர்கள் பலருக்கும் வலைவிரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி தந்தைகள் பலரும் அறிவாலய தலைமைக்கு மிக மிக நெருக்கமானவர்கள்.
உருண்டுபோன தலைகள்
அதேநேரத்தில் யார் விசுவாசி என்கிற ஆடுபுலி ஆட்டத்தில் அவ்வப்போது உருண்டுபோகும் தலைகளாகவும் இவர்கள் இருந்து வருகின்றனர். அப்படி உருட்டப்பட்டு ஒதுங்கிவிட்ட சிலரைத்தான் வலையில் விழ வைத்து வருகின்றனராம்.
திருவண்ணாமலையாரும் அவுட்
இதில் ஒருவரை சமீபத்தில் வளைத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை ஜாம்பவானும் வலையில் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அறிவாலயத்தை :சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
தாவுதல் உறுதி
இருப்பினும் இந்த "கல்வித் தந்தைகள்" போக்கை அறிவாலய தலைமையும் புரிந்து கொண்ட்டுவிட்டதாம். போனால் போகட்டும் என்கிற ரேஞ்சில் அறிவாலயமும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் 'தாவி' செல்வது உறுதி என்றே கூறப்படுகிறது.
வடதமிழகம்தான் டார்கெட்
"கேப்டன்" எப்படி பாமகவின் ஆதிக்கத்தையும் தாண்டி வடதமிழகத்தில் அதிரடியாக கலக்கினாரோ, அதிரவைத்தாரோ அப்படித்தான் "புதிய" கட்சியும் களத்துக்கு வர திட்டமிட்டுள்ளதாம்... இதற்காகத்தான் வடதமிழக கல்வித் தந்தைகள் வளைக்கப்படுகின்றனர் என கூறப்படுகிறது. இப்பப் பார்த்து தலைவர் வலுவிழந்து இருக்கிறாரே என்ற கவலையில் உள்ளனர் அடிமட்டத் தொண்டர்கள்