For Daily Alerts
Just In
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றார் மாஃபா பாண்டியராஜன்
சென்னை: தமிழக அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறையின் புதிய அமைச்சராக மாஃபா கே. பாண்டியராஜன் பதவியேற்றார். பாண்டியராஜனுக்கு ஆளுநர் கே. ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.
மாஃபா நிறுவனத்தை தொடங்கி அரசியல்வாதியாக மாறிய கே. பாண்டியராஜன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றிய பயோடேட்டாவை புள்ளி விபரமாக தெரிந்து கொள்வோம்.
- கே.பாண்டியராஜனுக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி கிராமம். இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். 1959, ஏப்ரல் 26ம் பிறந்த இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்த்தபடி சிவகாசியில் உள்ள எஸ்.ஹெச்.என்.வி பள்ளியில் பள்ளி படிப்பையும், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.யு.சி படிப்பையும் நிறைவு செய்தார்.
- கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.டெக் பொறியியல் பட்டம் பெற்றார். பின் ஜாம்ஷெட்பூரில் உள்ள புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். பின் வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார்.
- 1992ம் ஆண்டு மாஃபா என்கிற ஐ.டி நிறுவனத்தை துவங்கினார். அன்றில் இருந்து தான் மாஃபா பாண்டியராஜன் ஆகிப் போனார். 60,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் 2010ம் ஆண்டில் 1000கோடி என்கிற இலக்கை எட்டியது.
- அந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 3.5 லட்சம் ஊழியர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார் பாண்டியராஜன்.
- தனது அரசியல் ஆர்வம் காரணமாக பாஜகவில் இணைந்தார். அந்த சமயத்தில் தான் விஜயகாந்த் அசுர வளர்ச்சி அடைந்தார். பாஜகவில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வில் ஐக்கியமானார்.
- விஜயகாந்தின் ஆலோசகராக இருந்தார் பாண்டியராஜன். விஜயகாந்த்தும் அவருக்கு விருதுநகர் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அதே சமயத்தில் தேர்தல் பிரிவுச் செயலாளர் என்ற பொறுப்பும் கொடுத்தார்.
- விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாண்டியராஜன், 2014ம் ஆண்டு கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அ.தி.மு.க முகாமிற்கு மாறினார்.
- 2016 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் சமயத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.கவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
- பாண்டியராஜனுக்கு ஆவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார் ஜெயலலிதா. மீண்டும் ஆட்சியமைந்து 4 மாத கால இடைவெளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கியுள்ளார் ஜெயலலிதா. மஃபா நிறுவனத்தை தொடங்கிய மாஃபா பாண்டியராஜன், தற்போது மாண்புமிகு அமைச்சர் ஆகியுள்ளார்.
- புதிய அமைச்சராக கே.பாண்டியராஜன், ஆளுநர் மாளிகையில் செவ்வாய்கிழமையன்று மாலை ராகுகாலம் முடிந்து 4.35 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் கே.ரோசய்யா செய்து வைத்தார்.
- பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு விழா முடிந்த உடன் ஆளுநர், முதல்வருடன் சம்பிரதாயப்படி பாண்டியராஜன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்
Comments
English summary
Entrepreneur-turned-politician ‘Ma Foi’ K Pandiarajan has been made the new School Education Minister. Swearing-in of the new minister would take place at Raj Bhavan on Today evening.