தீந்தமிழன், திராவிட தலைவன்... திகார் கொண்டானுக்கு வரிசைக் கட்டி வரும் பட்டங்கள்
தீந்தமிழன், திராவிட தலைவன் என புதுப்புது பட்டங்கள் தினகரனின் பெயருக்கு முன்னால் வரிசைக் கட்டி கொண்டு நிற்கின்றன.
சென்னை: திகார் சிறைக்கு சென்று ஜாமீனில் திரும்பிய தினகரனுக்கு புதுப்புது பட்டங்கள் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கின்றன.
ஜெயலலிதா மறைந்த பிறகு, சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, தினகரனின் கை ஓங்கி விட்டுள்ளது என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆட்சியிலும், அரசு டென்டர் விடுவதில் தலையிட்டு தினகரன் தலையீடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடியின் நிழலாக தொடர்ந்து வந்த தினகரன் மீது அமைச்சர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதனால் அவரை கைகழுவ நினைத்து, சரியான சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தனர்.
தினகரன் கைது
அப்போது இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தபோது கைது செய்யப்பட்டார். இதுதான் சாக்கு என்று அமைச்சர்கள் நள்ளிரவு கூட்டம் போட்டு தினகரனின் தொடர்பை வெட்டி விட்டனர்.
நற்பெயர் எடுக்க...
பின்னர் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த தினகரனின் தன் ஆட்டத்தை தொடங்க நினைத்தார். அதற்காக அமைச்சர்களை ஏதோ மன்னித்து விடுவது போல் பேசி நற்பெயர் வாங்க முயற்சித்தார். ஆனால் அமைச்சர்களோ படு உஷாராக தினகரனை ஒதுக்கி வைத்தது ஒதுக்கி வைத்ததுதான் என்றார்கள்.
தீந்தமிழன்
தற்போது தினகரன் பக்கம் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அவரது கை ஓங்கியுள்ளது. அதனால் அவருக்கு பட்டங்களும் வரிசை கட்டி வருகின்றன. தீந்தமிழன், திராவிட தலைவன் என்றெல்லாம் ஆதரவாளர்கள் மத்தியில் தினகரன் அன்போடு அழைக்கப்படுகிறார்.
வாரி வழங்கப்படும் பட்டங்கள்
இவர் அளித்த பதவிகளை 4 எம்எல்ஏ-க்கள் வேண்டாம் என்று தூக்கிவிசிப்பட்ட நிலையிலும், வம்படியாக கட்சியை நான்தான் காப்பாற்றுவேன் என்று சூளுரைத்து வருகிறார்.ஜெயலலிதா இருந்தவரை பெரும்பாலும் மக்களுக்கு அறியப்படாத சசிகலா, தினகரனின் குடும்பத்தினர் தற்போது வெளியே வரத்தொடங்கி விட்டால் தொண்டர்களும் ஆளாளுக்கு பட்டத்தை வாரி வழங்கி வருகின்றனர்.
பேரவை
இதன் உச்சமாக தீந்தமிழன் தினகரன் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தீந்தமிழன் தினகரன் பேரவையில் சேர அழைப்பும் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.