புதுவையில் புதிதாக நியமிக்கப்பட்ட 3,080 பேர் பணி நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி !
புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பல்வேறு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 3,080 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகளும் வருமான வரித்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்துவதுடன், அரசுத் துறைகளின் செயல்பாடுகளும் தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், புதுச்சேரியில் அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தன. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் தேர்தல் விதிகளை மீறி பல்வேறு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 3,080 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.