ஈரோட்டில் தவறான சிகிச்சையால் புதுமாப்பிள்ளை மரணம் – உறவினர்கள் முற்றுகை போராட்டம்
ஈரோடு: ஈரோட்டில் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் புது மாப்பிள்ளை மரணமடைந்த காரணத்தினால் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபா காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் பிரகாஷ். இவருக்கும் இந்துமதி என்பவருக்கும் மூன்று மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.
கடந்த 23 ஆம் தேதி காலை வங்கி வேலைக்காக வீட்டில் இருந்து டூவீலரில் சென்ற பிரகாஷ் முத்துகவுண்டன்பாளையம் பிரிவு சுற்றுப்பாதைக்கு பக்கத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் லேசான காயத்துடன் தப்பிய பிரகாஷ் அவரே எழுந்து ஒரு ஆட்டோ பிடித்து ஏறி ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
பிறகு தன் குடும்பத்துக்கு மொபைல் மூலம் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பிரகாஷின் உடல் நிலையை பரிசோதித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் அறிவுறுத்தினர்.
இதற்காக மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர். உறவினர்களும் உடனடியாக 1.5 லட்சம் பணத்தை செலுத்தினர். அறுவை சிகிச்சையை முடித்ததும் மயக்கம் தெளிய இன்னும் இரண்டு நாள் ஆகும். பிரகாஷ் நன்றாக உள்ளார்' என உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பிரகாஷ் இதய நோயால் இறந்து விட்டதாக கூறிய டாக்டர்கள் அவரது உடலை எடுத்துக்கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த சூரம்பட்டி போலீஸார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரகாசின் மரணம் குறித்து சூரம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.