சரத்குமார் போட்டியிடும் திருச்செந்தூரில் மறு கருத்துக் கணிப்பு நடத்தும் நியூஸ் 7
சென்னை: நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் போட்டியிடும் திருச்செந்தூர் தொகுதியில் மட்டும் இன்று மறு கருத்துக் கணிப்பு நடத்துகின்றன நியூஸ் 7 சேனலும், தினமலர் நாளிதழும்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை மண்டல வாரியாக நியூஸ் 7- தினமலர் வெளியிட்டு வருகின்றன. இதுவரை மேற்கு மற்றும் தெற்கு மண்டல தொகுதிகளுக்கான கணிப்புகளை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.
நேற்று தெற்கு மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பை இவர்கள் வெளியிட்டனர். திருச்செந்தூர் தொகுதிக்கான முடிவு மட்டும் வெளியிடப்படவில்லை. திருச்செந்தூரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வாக்குச் சீட்டுக்களுக்கான பையில் மொத்தமாக வாக்குச் சீட்டுகள் போடப்பட்டிருந்ததாலும், அந்தப் பை திறந்திருந்ததாலும் அவற்றில் முறைகேடு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த கருத்துக் கணிப்பை ரத்து செய்து விட்டனராம்.
அதற்குப் பதில் இன்று திருச்செந்தூர் தொகுதியில் 1000 பேரிடம் மீண்டும் கருத்துக் கணிப்பு நடத்தவுள்ளனராம். அதை நடத்தி முடித்து விட்டு அதன் முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக நேற்றைய நியூஸ் 7 கருத்துக் கணிப்பு முடிவு ஒளிபரப்பின்போது தினமலர் நாளிதழ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூர் தொகுதியில்தான் சரத்குமார் போட்டியிடுகிறார். வலிமை வாய்ந்த திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனை அவர் எதிர்த்து நிற்கிறார். அதேசமயம், அவர் தற்போது உறுப்பினராக உள்ள தென்காசி தொகுதியில் அதிமுக வெல்லும் வாய்ப்பில் உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.