ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்திற்கு நேரில் ஆதரவு.. டெல்லி சென்றடைந்தார் முதல்வர் பழனிச்சாமி
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவிக்க முதல்வர் பழனிச்சாமி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்.
சென்னை: ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ள ராம் நாத் கோவிந்துக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவிக்க விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றடைந்தார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.
மோடி போன்கால்
தாங்கள் அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்துவை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். மேலும், ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்யும் போது உடன் இருக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
பழனிச்சாமி ஆதரவு
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாஜக வேட்பாளர் ராம் நாத்தை ஆதரிப்பதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
டெல்லி பயணம்
இந்நிலையில், இன்று டெல்லிக்கு விமானம் மூலம் முதல்வர் பழனிச்சாமி புறப்பட்டுச் சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் அவர் தங்கியுள்ளார்.
நேரில் ஆதரவு
பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார் முதல்வர் பழனிச்சாமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.