ஜனாதிபதி பதவியைக் கைப்பற்ற பாஜக தீவிரம்... சீதாராம் யெச்சூரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லி: ஜனாதிபதி பதவியை பாஜக கைப்பற்ற அதிரடி வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், ஆளும் பாஜக அரசு சார்பாக, இதுவரை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து தரப்பின் ஆதரவை பெற்ற ஒரு வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சித்து வருகிறது.
பாஜக மூவர் குழு
இந்நிலையில், பாஜக சார்பாக, 3 பேர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவை தெரிவிக்கும்.
யெச்சூரியுடன் சந்திப்பு
அதன் அடிப்படையில், இன்று டெல்லியில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அவருடன் வெங்கய்ய நாயுடுவும் சென்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
23ம் தேதி மனுதாக்கல்
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், வேட்பாளர் பெயரை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக தனது வேட்பாளர் வரும் 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பொது வேட்பாளர்
ஒருமித்த கருத்து என்ற பெயரில் தனக்கு ஆதரவான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.