ஐ.டி. ரெய்டுக்கு பயந்து ராம் நாத்தை ஆதரிக்கிறது அதிமுக… இதுதான் ஜெ. வழியா.. திருநாவுக்கரசர் காட்டம்
ஐ.டி. ரெய்டுக்கு பயந்தே பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்தை அதிமுக ஆதரிக்கிறது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை அதிமுகவின் இரு அணிகளும் ஆதரித்துள்ளன. இது ஐ.டி. ரெய்டுக்கு பயந்து எடுக்கப்பட்ட முடிவு என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.
எடப்பாடி டீம்
இது தொடர்பாக நேற்று மாலை சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாஜக வேட்பாளர் ராம் நாத்தை ஆதரிப்பதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
ஓபிஎஸ் டீம்
இதே போன்று இன்று ஓபிஎஸ் அணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதிலும், ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக ஓபிஎஸ் அணியினர் முடிவெடுத்து அறிவித்துள்ளது.
கண்டனம்
இதனை கடுமையாக கண்டித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர். இதுகுறித்து அவர் பேசும் போது, அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் பாதைக்கு மாறாக அதிமுக முடிவெடுத்து தவறிழைத்துவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
ஐ.டி. ரெய்டுக்கு பயந்து..
ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர், பாஜக அரசு தமிழக அமைச்சர்களின் வீடுகளில் ஐ.டி. ரெய்டு நடத்தியது. ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால் பாஜக மீண்டும் ஐ.டி. ரெய்டு நடத்தும் என்று பயந்தே இந்த முடிவை அதிமுக எடுத்துள்ளது என்று திருநாவுக்கரசர் கூறினார்.