ஜெயலலிதா பிரசாரத்தில் 5 பேர் சாவு: தலைமைச் செயலர், டிஜிபிக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
சென்னை: பிரசார கூட்டத்தில் வெயில் கொடுமையால் பல பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து விளக்கம் கேட்டு, தமிழக தலைமைச் செயலர் மற்றும், டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விருதாசலம், சேலம் போன்ற நகரங்களில் நடைபெற்ற, முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆடு, மாடுகளை கூட கூட்டமாக அடைத்து வேனில் கூட்டி செல்ல முடியாத நிலை இருக்கும் நாட்டில், மனித உயிர்களை அலட்சியமாக பலியாகவிடுவதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
இன்னும் 2 வாரங்களுக்குள் இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமை கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.