கொளுத்தும் வெயிலுக்கு இதமாய் மழை பெய்யும் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு
கோடை மழை இடியும் மின்னலுமாய் கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு குளுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை: சென்னையில் வெப்பம் தகித்து வரும் நிலையில் கோடைக்கு இதமாய் தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்கு கோடை மழை இடியும்
மின்னலுமாய் கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் குளுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை கால வெப்பம் சுட்டெரித்து வருகிறது. சில மாவட்டங்களில் நூறு டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.
சதமடித்த வெயில்
புதன்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 96.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை வெயில்
சென்னையில் வர்தா புயலுக்குப் பின்னர் மழையை கண்ணில் கூட பார்க்க முடியவில்லை. ஏரிகள் எல்லாம் வறண்டு வருகின்றன. நேற்று 91.4டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வுமைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மழைக்கு வாய்ப்பு
வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழகத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
சென்னையில் மேக மூட்டம்
வட கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 93.2டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும், குறைந்தபட்சமாக 80.6 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் என்று கூறியுள்ளார்.
கோவை, நீலகிரியில் மழை
கோவை, நீலகிரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 20.4 செ.மீ வரை மழை அளவு பதிவாகியுள்ளது. கோத்தரிகியில் 17 செமீ, குன்னூரில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கையில் 9 செமீ, தோண்டி, போடிநாயக்கனூர், வேலூர் மாவட்டம் கலவையில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.