ஜிஎஸ்டியால் குழப்பம்... நீலகிரியில் தேயிலை உற்பத்தி நிறுத்தம்.. விவசாயிகள் கவலை!
ஜி.எஸ்.டி வரியால் நீலகிரி மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் தேயிலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நீலகிரி : மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்குவது தேயிலை உற்பத்தி. குறிப்பாக மாவட்டத்தில் தலைநகரான ஊட்டி உட்பட குன்னூர், கூடலுார், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்படும் பசுந்தேயிலைகள் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூர் தேயிலை ஏல மையத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சுமார் 102 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் இங்கு இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, கடந்த 3 வாரங்களாக தேயிலை தூள் ஏலம் எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி தேயிலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ. 20 கோடி மதிப்பிலான 50 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.
இதனைதொடர்ந்து, நீலகிரி சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், 102 தேயிலை தொழிற்சாலைகள் நேற்று முதல் தேயிலை உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் தேயிலை உற்பத்தி நிறுத்தத்தால், பசுந்தேயிலை எடுக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குழப்பம்
இது குறித்து நீலகிரிமாவட்ட தேயிலை வர்த்தகர்கள் கூறுகையில் ஜிஎஸ்டி வரி அமலில் உள்ளதால் ஏல மையங்களில் தேயிலை தூள் கொள்முதல் செய்வதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏல மையங்களில் கொள்முதல் செய்யப்படும் தேயிலை தூளுக்கு உரிய ரசீது மற்றும் வவுச்சர்களை யார் சமர்பித்து வரி செலுத்துவது என்ற குழப்பம் வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மத்தியில் நிலவுகிறது.
தேக்கம்
இதனால் தேயிலைத் தூள் கொள்முதல் செய்ய யாரும் முன் வருவதில்லை. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தேயிலை தூள் தேக்கமடைந்து தேயிலை தூள் ஏலம் போகாததால் பணப்புழக்கம் நின்று விட்டது.
கொள்முதல் நிறுத்தம்
மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 102 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் பச்சை தேயிலைக்கு உரிய விலை கொடுக்க முடியாததால் பச்சை தேயிலை வாங்குவதை நிறுத்தியுள்ளன. இதனால் ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை கொள்முதல் செய்ய வேண்டாம் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
வேலைஇழப்பு அபாயம்
நீலகிரி மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் இந்த மாவட்டத்தின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும் அபாயம் உருவாகியுள்ளது.மேலும் இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது. மத்திய,மாநில அரசுகள் உடனடியாக இதற்கு ஒரு நல்லதொரு தீர்வை ஏற்ப்படுத்த வேண்டும் என்று தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.