வணக்க்க்க்க்கம்... ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார் நிர்மலா பெரியசாமி!
நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் ஆரோக்கியமாக இல்லை. தவறான இடத்தில் உள்ளமோ என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இவ்வாறு நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.
சென்னை: அதிமுக நட்சத்திர பேச்சாளராக இருந்த செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, இன்று மாலை ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பங்கேற்று பேசினார்.
அப்போது பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசிய நிர்மலாவுக்கும், பா.வளர்மதிக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நிர்மலா பெரியசாமி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பேட்டி
நிர்மலா பெரியசாமி கூறியதாவது: நீண்ட நாட்களாக இந்த திட்டம் இருந்தது. நான் எப்படியும் இரு அணிகளும் ஒன்றுபட்டுவிடும் என்று காத்திருந்தேன். அம்மாவின் கட்சியை விட்டு வெளியே போகவிருப்பப்படவில்லை என்பதால் யோசித்துக்கொண்டிருந்தேன். என் மனதில் ஊசலாடிக்கொண்டிருந்த எண்ணத்தை இப்போது எடுக்க இறைவன் வழிகாட்டிவிட்டார்.
குறுக்கே புகுந்த குண்டு கல்யாணம்
அதிமுக ஆலோசனை கூட்டத்தில், நான் அமைதியாக பேசிக்கொண்டிருந்தபோது, சி.ஆர்.சரஸ்வதி, குண்டுகல்யாணம் ஆகியோர், அதில் குறுக்கிட்டனர். ஓ.பி.எஸ் அண்ணன் நமக்கு எதிரியா என நான் கேட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர்கள் என்னை விமர்சனம் செய்தனர்.
நீங்கள் யார்
ஓ.பி.எஸ் எதிரி இல்லை என்றால், நீங்கள் ஏன் கட்சியில் இருக்க வேண்டும் என்று என்னை கேட்டார். நீங்கள் யார் என்னைகட்சியை விட்டு வெளியேற சொல்ல என நான் கேட்டேன். அதற்குள், வளர்மதி வந்து என்னை அடக்க பார்த்தார். சொந்த தொகுதியில் மக்களால் விரட்டப்பட்ட வளர்மதி என்னை அடக்க முயல என்ன தகுதியுள்ளது?
பலரும் புழுக்கத்தில் உள்ளனர்
அதிமுகவிலுள்ள 90 சதவீதம்பேர் மனப்புழுக்கத்தில்தான் உள்ளனர். பதவி, கவுரவம் என அனைத்து சலுகைகள் கிடைத்தாலும்கூட அதிமுகவிலுள்ள பலரும் மன புழுக்கத்தில்தான் உள்ளனர். விரைவில் ஒவ்வொருவராக பன்னீர்செல்வம் அணியில் வந்து இணைவார்கள். பன்னீர்செல்வம் அணியிலிருந்து தற்போது 2 பேர் என்னிடம் பேசினர். அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூறினர். ஆனால் நான் எனது முடிவில் உறுதியாக உள்ளேன்.
தவறான இடத்தில் இருந்தேன்
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு திரும்பினால் அவரையும் சேர்த்தே ஏற்போம் என்றுதான் டிடிவி தினகரன் கூறியிருந்தார். அப்படியிருக்கும்போது நான் பேசியதில் என்ன தவறு. நீண்டகாலமாக நான் மன வருத்தத்தில்தான் இருந்தேன். தனிப்பட்ட வகையில் எனக்கு அங்கு தொல்லை இல்லை. ஆனால் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட புழக்கத்தால் நான் அதிமுகவில் மன வருத்தத்தோடுதான் இருந்தேன். நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் ஆரோக்கியமாக இல்லை. தவறான இடத்தில் உள்ளமோ என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இவ்வாறு நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.