நித்யா ராம்...மாளவிகா வேல்ஸ்... பியாலி - சின்னத்திரையின் ஜில் ஹீரோயின்கள்
சின்னத்திரையை பாம்பும், பேயும் ஆதிக்கம் செய்தாலும் அவர்கள் அழகான நாயகிகள் என்பதால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சென்னை: சின்னத்திரை சீரியல்களில் தற்போது புதுமுகங்களின் வரவு அதிகரித்து விட்டது. பார்த்த முகத்தையே எத்தனை நாட்கள் பார்ப்பது, நாமளும் இந்தி சீரியல் ரேஞ்சுக்கு மாறணும் என்று சில தமிழ் தயாரிப்பாளர்களும் யோசித்து புத்தம் புது நாயகிகளை வேறு சேனல்களில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றனர்.
தமிழக சின்னத்திரை ரசிகர்களும், இப்போது நாயகிகளுக்காகவே மொக்கை சீரியலாக இருந்தாலும் கரெக்டாக அந்த நேரத்திற்கு பார்த்து டிஆர்பியை அதிகரிக்கின்றனராம்.
வட இந்திய சேனல்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் மலையாள தேசத்தில் இருந்தும், கன்னட தேசத்தில் இருந்தும் இறக்குமதியான நாயகிகள் கொஞ்சம் ஓவர் கிளாமராகவே தமிழ் சீரியல்களில் வலம் வருகின்றனர். சில புதுமுக நாயகிகளை அறிமுகம் செய்கிறோம். உங்களுக்கு பிடித்த நாயகி யார் கமெண்ட் பதிவிடுங்கள் ரசிகர்களே!
நந்தினி மாளவிகா வேல்ஸ்
சன்டிவியின் நந்தினி சீரியலில் அழகிய பேயாக வந்து பயமுறுத்தும் இவர் மலையாள தேசத்து மங்கை மாளவிகா வேல்ஸ். அவ்விட தேசத்தில் அம்முவுண்டே அம்மா என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார். தமிழுக்கு புது வரவு. ரசிகர்களுக்கு பிடித்தமான அழகிய பேயாகிவிட்டார். பொட்டலம் கட்டி மேலே தொங்க விட்டவர்கள் எப்போது இறக்கி விடப் போகிறார்களோ என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நந்தினி நித்யா ராம்
பேயின் ஆதிக்கம் அதிகம் இருந்த சீரியல் உலகில் அழகிய பாம்பாக வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நித்யா ராம். பரதநாட்டியம் பயின்று நடனப்புயல் என்று பெயரெடுத்த நித்யாராம் கன்னட தேசத்து பைங்கிளி. இன்று வட இந்திய தேச நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு நடை, உடை, பாவனையில் பின்னியெடுக்கிறார். பாம்பாக மாறி இவர் படமெடுத்து ஆடி ரசிகர்களின் மனங்களை கொத்துகிறார். இவருக்காகவே இப்போதெல்லாம் டிஆர்பி எகிறுகிறதாம்.
சந்திர நந்தினி சுவேதா பாசு
விஜய் டிவியில் டப்பிங் தொடர் சந்திர நந்தினி. இதில் வாள் வீச்சில் அசத்தும் பெண்ணை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே என்று யோசித்தவர்களுக்கு ஒரு க்ளு இவர் கடந்த ஆண்டு ஊடகங்களில் அதிகம் அடிபட்ட சுவேதா பாசுதான். இப்போது சீரியல் மூலம் ரசிகர்களின் மனங்களை அள்ள வந்து விட்டார்.
பகல் நிலவு சமீரா
தெலுங்கு சீரியல்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சமீரா, விஜய் டிவியின் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். சீரியலில் தன்னுடைய காதலராக நடிக்கும் அன்வரை நிஜமாகவே காதலிக்கிறார் விரைவில் தமிழ்நாட்டு மருமகளாகி விடுவார் சமீரா.
பூவே பூச்சூடவா ரேஷ்மா ரேயா
ஜீ தமிழின் புதிய சீரியலான பூவே பூச்சுடவாவில் போல்டான ஹீரோயினாக வலம் வரும் நாயகி ரேஷ்மா ரேயா. கேரளா தேசத்து வரவு. 2016ல் மிஸ் மெட்ராஸ் ரன்னர் அப் வாங்கிய அழகி. எம்.ஓ.பியில் பி.பி.ஏ படித்த இவருக்கு தமிழ் நன்றாகவே பேசத்தெரியும். தமிழ் சீரியல் உலகில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
கங்கா பியாலி
சன்டிவியின் கங்கா தொடரில் அபிராமியாக நடித்து வரும் நாயகிதான் பியாலி. மும்பை சொந்த ஊராக இருந்தாலும் தமிழ் சீரியல் மீதான ஆசையில் சென்னைக்கு பறந்து வருகிறார். பெங்காலி மொழியில் வெளிவந்த ரங்கீன் கோதுலி படத்தில் நடித்துள்ள பியாலி‘ஜெய் ஜக் ஜனனி மா துர்கா' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இப்போது கங்கா மூலம் தமிழகத்திற்கு வந்து செல்கிறார்.
மக்களே அடுத்த ரவுண்டில் வேறு சில நாயகிகளை அறிமுகம் செய்கிறோம். இவர்களில் உங்களுக்கு யாரை பிடிக்கும் மறக்கமா கமெண்ட் போடுங்க.