திருவண்ணாமலை பவளக்குன்று மலையில் நித்தி சீடர்கள் மீண்டும் பூஜை
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றே பவழக்குன்று மலையில் பூஜைகளைச் செய்வதாக நித்தியானந்தா சீடர்கள் புதுக் கதையை கூறியுள்ளனர்.
திருவண்ணாமலை : பவழக்குன்று மலையில் பூஜை செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி நித்தியானந்தா சீடர்கள் மீண்டும் பூஜை செய்யத் தொடங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் அருகே பழமை வாய்ந்த பவழக்குன்று மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்புகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பாக நித்தியானந்தாவின் சீடர்கள் மலையில் சுமார் 3 ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர்.
மலைப்பகுதிகளில் தென்னங்கீற்றுகளால் குடில் அமைத்து தங்கத் தொடங்கியவர்கள், இங்குள்ள மலை ஒன்றில் நித்தியானந்தா தவம் செய்து ஞானம் பெற்றதாகக் கூறி அங்கு வழிபாடுகளும் நடத்தத் தொடங்கினர். இதோடு அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் வரக்கூடாது என்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
ஆக்கிரமிப்பு இடத்தில் கான்கிரீட் கொண்டு ஆசிரமம் உள்பட பல்வேறு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை செய்யவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப முள்வேலி அமைப்பதற்கான கம்பிகள், கற்கள் மலைக்கு கொண்டு வரப்பட்டன. இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் மலையில் முள்வேலி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விரட்டியடிப்பு
மலைப்பகுதியில் ஆசிரமம் கட்ட திட்டமிட்ட இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 18ம் தேதி பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நித்தியானந்தா சீடர்களை கற்களைக்கொண்டு வீசி அடித்து விரட்டியடித்தனர்.
உதவி ஆட்சியர் உத்தரவு
பொதுமக்கள் புகாரையடுத்து திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரவி மற்றும் போலீசார் பவழக்குன்று மலைக்கு சென்று அவர்கள் நித்தியானந்தாவின் சீடர்கள் அமைத்திருந்த ஆசிரமத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து சட்டத்திற்கு புறம்பாக போடப்பட்ட குடில்களை அகற்ற உத்தரவிட்டனர்.
சீடர்கள் வெளியேற்றம்
ஆசிரமத்திற்கு உள்ளே இருந்தவர்களை வெளியேற்றியதோடு, பெண் சீடர்களும் பெண் காவலர்களால் இழுத்து வெளியே அனுப்பப்பட்டனர். மேலும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
மீண்டும் பூஜை
இந்நிலையில் நித்தியானந்தா சீடர்கள் நேற்று முதல் மீண்டும் பவழக்குன்று மலையில் பூஜை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலைப்பகுதியில் மீண்டும் பூஜை செய்து வரும் நித்தி சீடர்கள் மாவட்ட நிர்வாகத்திட அனுமதி பெற்றே பூஜை செய்வதாக புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளனர்.
சர்ச்சை சாமியார் நித்தி
கடவுளின் ஞானம் பெற்றவர் என்று சொல்லிக்கொள்ளும் நித்தியானந்தா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த படுக்கையறைக் காட்சிகள் வெளியானதையடுத்து அவர் சர்ச்சையில் சிக்கினார்.
புதுக்கதை
தனது சீடர்களை வைத்து இடத்தை வளைத்து போட்டு ஆசிரமம் கட்டுவதில் பலே கில்லாடியானவர் என்று சமூக செயற்பாட்டாளர்கள் நித்தியானந்தா பற்றி புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகமே பவழக்குன்று மலையில் இருந்து நித்தி சீடர்களை எச்சரித்து அனுப்பிய நிலையில் தங்களிடம் பூஜை நடத்த அனுமதி இருப்பதாக சில காகிதங்களை காட்டுகின்றன, இதில் எது உண்மை என்பது அதிகாரிகள் ஆய்விற்குப் பின்னரே தெரிய வரும்.